Ad Widget

 ‘கரை எழில்’ குறித்து வடக்கு முதல்வருக்குக் கடிதம்

கிளிநொச்சி, கரைச்சி பிரதேச செயலகத்தின் கலாசாரப் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட கலாசார விழாவின் போது வெளியிடப்பட்ட, ‘கரை எழில் 2016’ என்ற நூல் தொடர்பில், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்குக் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனே இவ்வாறு கடிதம் அனுப்பிவைத்துள்ளார். அக்கடிதத்தின் பிரதிகள், மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன், வடமாகாண கல்விப் பண்பாட்டு அலுவல்கள், விளையாட்டுத்துறை, இளைஞர் விவகார அமைச்சர் த.குருகுலராசா ஆகியோருக்கும் அனுப்பிவைத்துள்ளார்.

அத்துடன், கரைச்சிப் பிரதேச கலாசார பேரவையின் தலைவரும் பிரதேச செயலாளருமான கோ.நாகேஸ்வரன் காவேரி கலாமன்ற இயக்குநர் ரீ.எஸ்.யோசுவா ஆகியோருக்கும் அக்கடிதத்தின் பிரதிகளை அனுப்பி வைத்துள்ளார்.

அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இந்த கலாசார விழா, கடந்த 8ஆம் திகதியன்று இடம்பெற்றது. அன்று, ‘கரை எழில் 2016’ என்ற நூலும் வெளியிட்டப்பட்டது.

கிளிநொச்சி, கரைச்சி பிரதேச செயலகத்தின் கலாசார பேரவையினால் வெளியிடப்பட்ட ‘கரை எழில் 2016’ என்ற நூலில் எழுதப்பட்டுள்ள ‘கிளிநொச்சியும் மலையகத்தமிழரும்’ என்ற கட்டுரை உண்மைக்கு புறம்பானதும் ஒரு சமூகத்தை படுமோசமாக சித்தரிப்பதாகவும் அமைந்துள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில், சுமுகமாக வாழுகின்ற மக்களின் ஒன்றுமையைக் குலைத்து சமூகக் கட்டமைப்பைக் கூறுபோடுவதால் நன்மையடைய நினைக்கின்ற ஒரு குழுவின் திட்டமிட்ட செயற்பாடுகளுக்கு துணைபோவதாகவே இதனை உணர்ந்து கொள்ளமுடிகின்றது என்றும் குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறு வெளியாகியுள்ள இக்கட்டுரையானது இந்த மாவட்டத்தின் வளர்ச்சியையும் நன்மதிப்பையும் ஒற்றுமையையும் பெரிதும் பாதிப்படையச் செய்துவிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதாவது, ‘மலையக மக்கள் சமூகமானது வவுனியா, மன்னார் மற்றும் கிளிநொச்சி போன்ற இடங்களில், இடையறாத வேலை வாய்ப்பையும் தங்கியிருக்க ஒரு கொட்டில் போட இடமும் கிடைக்காததால் இவ்விடங்களில் தங்கி விட்டனர்’ என்ற சொற்பிரயோகங்கள் இந்த மக்களை இழிவு படுத்தும் சொற்பிரயோகங்களாக நோக்கமுடிகின்றது. இதேவேளை, சாந்தபுரம் என்ற கிராமத்தில் வரலாறு இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது.

கப்டன் சாந்தன் என்ற மாவீரனின் பெயரில் உருவாக்கப்பட்ட இக்கிராமத்தில் மாவீரர் போராளிகளின் குடும்பங்களும் வறுமைநிலையிலிருந்த ஏனைய குடும்பங்களும் அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக குடியமர்த்தப்பட்டனர்.

இன்று செழிப்பாகவுள்ள இக்கிராமத்தின் உண்மைத்தன்மை மாற்றப்பட்டு இம்மக்களின் வாழ்க்கை முறை கேலி செய்யப்பட்டுள்ளமை வேதனை அளிக்கின்றது.

பெண்கள் பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். தந்தை பெயர் தெரியாத குழந்தைகள் உள்ளனர். இவர்களில் பிறப்பு அத்தாட்சிப்பத்திரங்கள் இல்லாதவர்கள் அதிகளவு என, பல்வேறுபட்ட உண்மைக்குப் புறம்பான கருத்துக்களை இந்நூலில் விதைக்கப்பட்டுள்ளன.

ஒரு பிரதேசத்தின் வரலாற்று நூலாக அமையும் குறித்த நூலில் இவ்வாறு தவறான கருத்துக்களையும் ஒரு சமுகத்தை கூறுபோடும் வகையிலும் வெளியிடப்பட்டிருக்கின்றமை மிகவும் கண்டனத்துக்குரிய ஒன்றாகும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி

http://www.e-jaffna.com/archives/81180

Related Posts