Ad Widget

சிறுமியை துஷ்பிரயோகம் செய்ய முயற்சி – மூவர் கைது

13 வயதுச் சிறுமியை துஷ்பிரயோகம் செய்ய முயன்ற 40 வயதுடைய சந்தேகநபர், மற்றும் சிறுமியை வாளால் வெட்டிக் காயப்படுத்திய சந்தேகநபருடைய இரண்டு மகன்கள் ஆகியோரை வியாழக்கிழமை (07) கைது செய்ததாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர்.

ஓட்டுமடம் பகுதியை சேர்ந்த 13 வயதுச் சிறுமியின் பெற்றோர் திருமண நிகழ்வொன்றுக்கு கொழும்புக்குச் சென்றமையால் சிறுமியை தாவடி பத்திரகாளியம்மன் ஆலயத்துக்கு அருகிலுள்ள உறவினர் வீட்டில் விட்டுவிட்டுச் சென்றுள்ளனர்.

ஓட்டுமடத்திலுள்ள சிறுமியின் வீட்டிலிருந்த செல்லப்பிராணிக்கு சிறுமி, சாப்பாடு வைப்பதற்காக சென்றுவருவதை அவதானித்த தாவடியிலுள்ள உறவினர் வீட்டின் அயல் வீட்டுக்காரர், சிறுமியை பின்தொடர்ந்து சென்று துஷ்பிரயோகம் செய்ய முற்பட்டுள்ளார். சிறுமி கூக்குரலிடவே சந்தேகநபர் தப்பிச்சென்றுள்ளார்.

இது தொடர்பில் சிறுமி, தனது பெற்றோருக்கு தெரியப்படுத்தியதையடுத்து, பெற்றோர் சந்தேகநபரின் வீட்டுக்குச் சென்று வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது, சந்தேகநபரின் மகன்கள் இருவரும் சிறுமியை வாளால் வெட்டிக்காயப்படுத்தியுள்ளனர்.

இது தொடர்பில் சிறுமியின் பெற்றோர்கள் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் மூவரும் வியாழக்கிழமை (07) கைது செய்யப்பட்டனர்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.

Related Posts