Ad Widget

ஹர்த்தால் குறித்து பொலிஸாரின் விசேட அறிவிப்பு

அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று நாடளாவிய ரீதியில், ஹர்த்தால் முன்னெடுக்கப்படுகிறது. இதற்கு ஒத்துழைப்பு வழங்கி, பல துறைசார் தொழிற்சங்கங்கள், சேவையிலிருந்து விலக தீர்மானித்துள்ளன.

இந்த ஹர்த்தாலுக்கு 1000க்கும் அதிகமான தொழிற்சங்கங்கள் ஆதரவளித்துள்ளதாக தேசிய தொழிற்சங்க மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, ஆசிரியர், அதிபர் தொழிற்சங்கங்கள், ரயில் , பேருந்து, சுகாதாரம், வங்கி, மின்சாரம், அஞ்சல், துறைமுகம் மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட பல்துறைசார் தொழிற்சங்கங்கள் இன்றைய ஹர்த்தாலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்நிலையில்,ஹர்த்தால் குறித்து, பொலிஸ் ஊடகப் பிரிவு விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.

போராட்டத்தில் ஈடுபடும் உரிமையை பயன்படுத்தும்போது, ஏனையவர்களின் உரிமைகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயற்படக் கூடாது என பொலிஸ் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹர்த்தால் காரணமாக, தொழிலில் அல்லது வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது என அச்சுறுத்தும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சிரேஷ்ட பொலிஸ் பேச்சாளர், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இன்றைய தினம், நாடளாவிய ரீதியில், பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட எவருக்கும் உரிமை உள்ளது.

எனினும், அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில், செயற்படுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, போராட்டத்தில், ஈடுபடுபவர்கள், அமைதியான முறையில் ஈடுபடுமாறு சிரேஷ்ட பொலிஸ் பேச்சாளர், அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

Related Posts