வடக்கு கிழக்கு பிரதேசத்தில் எதிர்வரும் 27ம் திகதி நடைபெறவுள்ள பூரண கடையடைப்பு போராட்டத்திற்கு வவுனியா வர்த்தக சங்கம் தமது பூரண ஆதரவை வழங்கவுள்ளதாக அதன் தலைவர் ரி.கே.இராஜலிங்கம் தெரிவித்தார்.
வவுனியா மற்றும் கிளிநொச்சியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கோரிக்கைக்கு அமைவாக வர்த்தக சங்க நிர்வாக கூட்டம் நேற்ற (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றபோதே இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“வடக்கு, கிழக்கு பகுதிகளில் நீலமீட்புக்காகவும், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டியும் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் போராட்டங்கள் இரண்டு மாதங்களை கடக்கின்றன. அந்த மக்களின் போராட்டங்களையும், அவர்களின் உணர்வுகளையும் வர்த்தக சமூகமாகிய நாமும் மதிக்கின்றோம்.
அவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும். அதற்கமைவாக வவுனியா வர்த்தகர்கள் அனைவரும் தங்களது வர்த்தக நிலையங்களை எதிர்வரும் 27 ஆம் திகதி பூட்டி ஒத்துழைப்பு வழங்குமாறு அனைத்து வர்த்தகர்களையும் கேட்டுக் கொள்கின்றேன்” என வவுனியா வர்த்தக சங்கத்தின் தலைவர் ரி.கே.இராஜலிங்கம் மேலும் தெரிவித்தார்.