Ad Widget

ஹம்பாந்தோட்ட துறைமுகம் மற்றும் கைத்தொழில் பேட்டை பற்றிய எந்தவொரு உடன்படிக்கையும் செய்துகொள்ளவில்லை: ஜனாதிபதி

ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கைத்தொழில் பேட்டை தொடர்பில் அரசாங்கம் எந்தவொரு உடன்படிக்கையும் செய்துகொள்ளவில்லை. அது தொடர்பாக எந்தவொரு குழு அறிக்கையும் வெளியிடப்படவில்லை என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஜனாதிபதி இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் ஐம்பதாவது ஆண்டுவிழாவில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டின் மரபுரிமைக்கும் கௌரவத்துக்கும் பாதிப்பு ஏற்படக்கூடியவாறோ அரசியலமைப்புக்கு புறம்பான முறையிலோ எந்தவொரு நாட்டுடனோ அல்லது நிறுவனத்துடனோ அரசாங்கம் எந்தவொரு உடன்படிக்கையும் செய்துகொள்ளவில்லை. அவ்வாறு உடன்படிக்கை எதனையும் செய்வதாயின், குறித்த உடன்படிக்கையின் ஆரம்ப நடவடிக்கைகள் வெளிப்படையாக மேற்கொள்ளப்பட்ட பின்னர் அது சட்ட மா அதிபர், அமைச்சரவை மற்றும் பாராளுமன்றத்துக்கும் சமர்ப்பிக்கப்படுமென ஜனாதிபதி தெரிவித்தார்.

தன்மீது பெரும் நம்பிக்கை வைத்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நாட்டின் பிரதான சேவகனாக நாட்டு மக்கள் தன்னை தெரிவு செய்ததாக குறிப்பிட்ட ஜனாதிபதி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அந்த நம்பிக்கைக்கு பாதிப்பு ஏற’பட இடமளிக்கப்பட மாட்டாதென்றும் தெரிவித்தார்.

2017 ஆண்டு புதிய வேலைத்திட்டங்கள் ஊடாக நாட்டைக் கட்டியெழுப்பும் எதிர்பார்ப்புடனும் அர்ப்பணிப்புடனும் அரசாங்கம் முன்னேறிச் செல்லும் போது பல விமர்சனங்களை முன்வைத்து சிலர் அரசாங்கத்தைக் கவிழ்க்க முயற்சியெடுப்பதாகவும் 2020 ஆண்டில் மக்களின் விருப்பத்தினாலன்றி சட்டவிரோதமாகவோ, அரசியலமைப்புக்கு விரோதமாகவோ அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாதென்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

எந்த கட்சியாவது ஆட்சியதிகாரத்துக்கு வரும்போது, அந்த அரசாங்கம் சுதந்திரமாக தனது கடமைகளை மேற்கொள்வதற்கு இடமளிப்பது நாட்டை நேசிக்கும் அனைவரினதும் பொறுப்பாகும் என்பதுடன் அதிகார பேராசை மற்றும் குறுகிய அரசியல் தேவைகளுக்காக செயற்படுவதற்கு இன்னொரு தடவை வாய்ப்பில்லை எனவும் குறிப்பிட்டார்.

எனவே 2017 புதிய ஆண்டில் உண்மைக்குப்பறம்பான பிரச்சாரங்கள் செய்வதனை விடுத்து, நியாயமான விமர்சனங்களை முன்வைத்து நாட்டுக்கும் மக்களுக்குமாக நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக இணைந்துகொள்ளுமாறு அனைவரிமும் கேட்டுக்கொள்வதாக .ஜனாதிபதி குறிப்பிட்டார்.

கருத்து தெரிவித்த ஜனாதிபதி புலமைச்சொத்து கொள்ளை தொடர்பில் சட்டங்களை திருத்தி புதிய சட்டங்களை உருவாக்க நடவடிக்கை எடுப்பதாகவும் ஊடக நிறுவனங்கள் மற்றும் அது தொடர்பான பொறுப்பான நிறுவனங்கள் சட்டம், சுற்றுநிரூபங்கள் மற்றும் மனிதாபிமானத்தை மதித்து செயற்படுவார்கள் என நம்புவதாகவும் தெரிவித்தார்.
இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் புதிய நிர்வாக கட்டிடம் மற்றும் புனரமைக்கப்பட்ட கலையக தொகுதி ஆகியவற்றை ஜனாதிபதி திறந்து வைத்தார்.

அத்துடன் ஐம்பதாவது ஆண்டு நிறைவையொட்டி ஞாபகார்த்த முத்திரையும் முதல்நாள் தபால் உறையும் வெளியிடப்பட்டது.

சுங்கைக்குரிய இத்தேபான தம்மாலங்கார தேரர், வணக்கத்துக்குரிய கொட்டுகொட தம்மாவாச தேரர், அமைச்சர் கயந்த கருணாதிலக்க, பிரதி அமைச்சர் கருணாரத்ன பரணவிதான, ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் நிமல் போபகே, இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன தலைவர் நந்த முருத்தெட்டுவேகம மற்றும் கூட்டுத்தாபன அலுவலர்களும் நிகழ்வில் பங்குபற்றினார்கள்.

Related Posts