வடமாகாணத்தைச் சேர்ந்த தமிழ்மொழி மூல பட்டதாரிகள், வட மாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களுக்கான ஆசிரிய நியமனத்தின் போது தங்களையும் சிபாரிசு செய்யுமாறு பாரம்பரிய கைத்தொழிகள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை நேற்று (08) விடுத்தனர்.
வடமாகாணத்தைச் சேர்ந்த 1,000 தமிழ்மொழி மூல பட்டதாரிகள், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை யாழ். மாவட்ட செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர்.
இதன்போதே மேற்கண்டவாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.
அங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர்,
தான் ஏற்கனவே இதுபற்றி அமைச்சரவையில் கதைத்ததாகவும் ஜனாதிபதி சாதகமாக இதனை பரிசீலிப்பதாக கூறியிருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் வடமாகாணத்துக்கு வெளியே ஆசிரிய தொழிலை செய்வதற்கு பெருவாரியான பட்டதாரிகள் முன்வந்திருப்பது தமக்கு மகிழ்ச்சியளிப்பதாகவும் நாளை(இன்று) நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தின் போது இதை தான் மீண்டும் வலியுறுத்த இருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் எதிர்வரும் தினங்களில் ஜனாதிபதியின் வருகையின் போது விசேடமாக நடைபெறும் மாவட்ட கூட்டத்திலும் தான் இதுதொடர்பாக கோரிக்கை முன்வைக்கவுள்ளதாக குறிப்பிட்டார்.
வடமாகாணத்திலேயே ஆசிரிய ஆளணி மேலதிகமாக காணப்படுவதாகவும் இதன்காரணமாக தமக்கு வடமாகாணத்தில் ஆசிரியர் நியமனம் கிடைப்பது இயலாது எனவும் அமைச்சரிடம் பட்டதாரிகள் கருத்துத் தெரிவித்தனர்.
அத்துடன் வடமாகாணத்திற்கு வெளியே ஊவா மாகாணத்தில் சுமார் 3,000 ஆசிரியர் வெற்றிடங்கள் இருப்பதாகவும் தென்மாகாணத்தில் சுமார் 1,000 வெற்றிடங்கள் இருப்பதாகவும் நாடளாவிய ரீதியில் 50.000 ஆசிரிய உதவியாளர்களை நியமிப்பதற்கு மத்திய கல்வியமைச்சு திட்டமிட்டு இருப்பதாகவும் பட்டதாரிகள் தெரிவித்தனர்.