Ad Widget

வெளிநாடுகளால் கிடைக்கும் உதவிகளுக்கு அரசியல் சாயம் பூசாதீர்கள் – முதலமைச்சர்

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட எமக்கு தான் உதவிகள் தேவை. ஆகவே பாதிக்கப்பட்ட எங்களுக்கு அமெரிக்க மக்களால் பல விதமான நன்மைகளைத் தரும் வேளை எந்தவிதமான அரசியல் நிறங்களையும் பூசி அதனைக் கொச்சைப்படுத்த வேண்டாம் என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி விக்கினேஸ்வரன் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

vickneswaran

அமெரிக்க அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் சமூக செயற்பாட்டு மையத்தினால் கட்டப்பட்ட மீன் ஏல விற்பனை நிலையம் முதலமைச்சரால் இன்று காக்கைதீவில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அமெரிக்க அரசு எமக்கு பல வழிகளிலும் பல வருடங்களாக உதவிகளைச் செய்து வருகின்றனர். நான் அரசியலுக்கு வர முன்னரே அவர்களோடு சேர்ந்து பல செயற்றிட்டங்களில் பங்குபற்றியிருந்தேன்.

சட்டத்தரணிகள், நீதிபதிகள் மற்றும் வேறு பலருக்கு சட்டம் சம்பந்தமான பயிற்சிகளும் வழங்க அவர்களுக்கு உதவி செய்து கொண்டு இருந்தேன்.

ஆனால் அவர்கள் இங்கு வாழ்வாதார மேம்பாடுகள் தொடர்பிலான உதவிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது மிகவும் மகிழ்ச்சியான விடயம்.

காக்கைதீவுப்பகுதியில் பல்வேறு கழிவுப் பொருட்கள் , இறந்த மீன்களும் தேங்குவதனால் பல வருடகாலமாக இந்தப் பகுதிக்குள்ளால் நாம் வந்தால் துர்நாற்றம் வீசும்.ஆனால் இப்போது சுத்தப்படுத்தி அழகுபடுத்தி வைத்திருக்கின்றீர்கள்.

நாங்கள் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள். எமக்கு பல விதமான தேவைகள் உள்ளன. அவற்றை நல்குவதற்கு வெளிநாடுகளில் இருந்து பலர் முன் வந்துள்ளனர். இவ்வாறு வழங்குகின்ற போது வடக்கிற்கு மட்டும் வழங்குகின்றார்கள் ஏன் தென்பகுதிக்கு வழங்குகின்றார்கள் இல்லை என விமர்சனங்கள் ஏற்படுவது மனதிற்கு வேதனையளிக்கின்றது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு தான் நன்மை தேவை மற்றவர்களுக்கு அல்ல. ஆகவே பாதிக்கப்பட்ட எங்களுக்கு அமெரிக்க மக்களால் பல விதமான நன்மைகளைத் தரும் பொழுது அதற்கு எந்தவிதமான அரசியல் நிறங்களையும் பூசி கொச்சைப்படுத்தாது இருக்க வேண்டும் என்று அரசுடன் சம்பந்தப்பட்ட சிலருக்கு நான் குறிப்பிட விரும்புகின்றேன் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts