Ad Widget

விஷ ஊசியால் மரணமடைந்தோர் பெயர் விவரங்களைத் தாருங்கள்! முதல்வர் விக்கியிடம் அமைச்சர் மனோ கோரிக்கை

சரணடைந்த அல்லது கைதுசெய்யப்பட்ட விடுதலை புலி இயக்க உறுப்பினர்களுக்கு, புனர்வாழ்வு நடவடிக்கைகளின் போது விஷ ஊசி செலுத்தப்பட்டதாகவும், அதனால் பலர் சந்தேகத்துக்குட்பட்ட முறையில் இதுவரையில் மரணமடைந்துள்ளனர் எனக் கூறி வடமாகாணசபையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இது ஒரு மிகவும் பாரதூரமான குற்றச்சாட்டு ஆகும். இப்படி சுமார் 105 பேர் மரணமடைந்துள்ளனர் எனவும் ஒரு தகவல் கூறப்பட்டது.

இதுபற்றி நல்லிணக்க ஆணைக்குழுவிலும் ஒரு முன்னாள் போராளியால் சாட்சியம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் உங்கள் மாகாணசபையின் அமைச்சர் டெனிஸ்வரன் இந்த விடயம் தொடர்பில் மாறுபட்ட கருத்தை தெரிவித்து வருவதையும் உங்கள் கவனத்துக்கு கொண்டுவருகிறேன். எனவே இதுபற்றி, தேசிய சகவாழ்வு அமைச்சர் என்ற முறையில் ஆராய்ந்து மேல் நடவடிக்கை எடுக்க நான் முடிவு செய்துள்ளேன். இது தொடர்பில் மேலும் தகவல்களை, உங்கள் மாகாண சுகாதார அமைச்சின் மூலமாக பெற்று தாருங்கள்.

நீங்கள் தரும் தகவல் திரட்டில் புனர்வாழ்வு பயிற்சிகள் பெற்று வீடு திரும்பிய பின்னர் சந்தேகத்துக்கு உள்ளான முறையில் இறந்துபோயினர் எனக் கூறப்படும் முன்னாள் புலிகள் இயக்க உறுப்பினர்களின் பெயர்கள், அடையாள அட்டை இலக்கம், கடைசியாக வாழ்ந்த விலாசம், பிரதேச செயலாளர் பிரிவு, இறந்தபோது அவர்களது வயது, அவர்களது இறப்பிற்கான அதிகாரப்பூர்வ மருத்துவ காரணம், இறந்த திகதி, தொடர்பு கொள்ளக்கூடிய குடும்ப உறுப்பினரது பெயர், விலாசம், தொலைபேசி இலக்கம் ஆகியவற்றை உள்ளடக்கி தாருங்கள் என வடமாகாண முதல்வர் சி. வி. விக்னேஸ்வரனுக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாது –

இந்த விவகாரம் தொடர்பில் கடந்த வாரம் உங்களுடன், கொழும்பில் இருந்து பலாலிக்கு பயணிக்கும் வேளையில் நேரடியாக உரையாடியுள்ளேன். இந்த தகவல்களை பெற்று தரும்படி அப்போதும் கோரியிருந்தேன். இந்நிலையில் உங்கள் மாகாணசபையின் அமைச்சர் டெனிஸ்வரன் அவர்கள் இந்த விடயம் தொடர்பில் மாறுபட்ட கருத்தை தெரிவித்து வருவதையும் உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். எனவே இது தொடர்பில் ஒருமித்த கருத்தை ஏற்படுத்தி, நான் கோரியுள்ள விவரங்களை கூடிய விரைவில் எனக்கு அனுப்பி வையுங்கள். மேற்கண்ட தகவல்கள் கிடைக்கப்படுமானால், இது தொடர்பில் காத்திரமான மேல் நடவடிக்கைகள் எடுக்க முடியும் என நான் நம்புகிறேன். ஏனையோருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை, இத்தகைய தகவல்கள் மேலும் வலுவடைய செய்யும்.

இத்தகையை சம்பவங்கள் நடைபெறவில்லை என வடக்கிலும், தெற்கிலும் கூறிவருவோருக்கும் இது பதிலாக அமையும் என நம்புகிறேன். அத்துடன் இந்த தகவல்கள் முழுமையாக இல்லாத நிலையில் இந்த குற்றச்சாட்டு ஏற்புடமை கொண்ட ஒரு குற்றச்சாட்டாக ஏற்றுக்கொள்ளப்படுவதில் சிக்கல் இருக்கின்றது என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன்.

Related Posts