Ad Widget

விவசாயப் போதனாசிரியர்கள் பயிர் மருத்துவர்களாகத் தங்களைத் தரம் உயர்த்த வேண்டும் :பொ.ஐங்கரநேசன்

விவசாயப் போதனாசிரியர்கள் தங்களைப் பயிர் மருத்துவர்களாகத் தரம் உயர்த்த வேண்டும். அதன்மூலம் விவசாயிகளுக்குத் தகுந்த வழிகாட்டல்களை மேற்கொள்ள முடியும் என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

01

வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் இருந்து தெரிவுசெய்யப்பட்ட 30 விவசாயப் போதனாசிரியர்களுக்கு மின்- பயிர்ச்சிகிச்சைப் பயிற்சியை வழங்கும் செயலமர்வு இன்று திங்கட்கிழமை (05.09.2016) திருநெல்வேலி விவசாயப் பயிற்சி நிலையத்தில் ஆரம்பமானது. விவசாயம் மற்றும் உயிரியல் விஞ்ஞானத்துக்கான சர்வதேச மையத்தின் அனுசரணையில் மூன்று நாட்கள் நடைபெறவுள்ள இச்செயலமர்வின் தொடக்க நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் உரையாற்றுகையில்,

முப்பது வருட யுத்தத்தின் பாதிப்புகளில் இருந்து விடாமுயற்சியுடைய எமது விவசாயிகள் சில வருடங்களில் மீண்டெழுவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. ஆனால், அவர்கள் மீளமுடியாத இன்னுமொரு யுத்தத்துக்குத் தொடர்ந்தும் முகங்கொடுத்து வருகிறார்கள். அது அவர்களது பயிர்கள் மீது பீடைகள் தொடுத்திருக்கும் யுத்தம்.

இயற்கைச் சூழற்தொகுதிகளில் எல்லா உயிரினங்களுக்கும் இடையில் ஒரு சமநிலை நிலவுகிறது. இங்கு நல்லது கெட்டது என்று எதுவும் இல்லை. பீடைகள், களைகள் என்ற வித்தியாசம் இல்லை. ஆனால், ஒற்றைப் பயிர்ச்செய்கையை மேற்கொள்ளும் விவசாய நிலங்களான செயற்கைச் சூழலில் உயிரினச் சமநிலை இல்லை. இங்கு பீடைகளினதும் களைகளினதும் பெருக்கம் தவிர்க்க முடியாமல் உள்ளது.

எங்களுக்கு நோய்கள் வரும்போது மருத்துவர்களின் உதவியை நாடுகிறோம். மருத்துவர்களின் பரிந்துரைச் சிட்டைகள் இன்றி மருந்தகங்களில் மருந்தினைக் கொள்வனவு செய்யமுடியாது. ஆனால், பயிர்நோய்களுக்கு விரும்பிய மருந்துகளை விரும்பிய அளவுகளில் எவரும் எங்கும் வாங்கலாம். உரிய ஆலோசனைகள் இல்லாமல் விளம்பரங்களை நம்பி விவசாய இரசாயனங்களைப் பயன்படுத்துகிறோம். இதனால் நிலமும், நீரும், உணவும் நச்சாவதோடு நாளடைவில் மருந்துகளால் எதுவும் செய்ய இயலாதவாறு பீடைகளும் இசைவாக்கம் பெற்று வருகின்றன.

இவற்றைத் தவிர்ப்பதற்கு விவசாயப் போதனாசிரியர்கள் டிஜிற்றல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும். கையடக்கக் கணினிகளில் விவசாயம் தொடர்பான மென்பொருட்களை நிறுவிக்கொண்டால் உலகில் எந்த மூலையில் உள்ள விவசாய நிபுணர்களுடனும் நொடியில் தொடர்புகொண்டு ஆலோசனைகளைப் பெற முடியும். இதன்மூலம் விவசாயப் போதனாசிரியர்கள் பயிர் மருத்துவர்களாகத் தங்களை வளர்த்துக்கொண்டு விவசாயிகளுக்குத் தகுந்த வழிகாட்டல்களை மேற்கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில் விவசாயத் திணைக்களத்துக்கு ஒதுக்கப்பட்ட மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியில் இருந்து 15 கையடக்கக் கணினிகள் விவசாயப் போதனாசிரியர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளன. மேலும் 15 கையடக்கக் கணினிகளை விவசாயம் மற்றும் உயிரியல் விஞ்ஞானத்துக்கான சர்வதேச மையம் விரைவில் அன்பளிப்பாக வழங்கவுள்ளது.

13

மாகாண விவசாயப்பணிப்பாளர் சி.சிவகுமார் தலைமையில் நடைபெற்ற செயலமர்வின் ஆரம்ப நிகழ்ச்சியில் விவசாய அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன் மற்றும் உயிரியல் விஞ்ஞான சர்வதேச மையத்தின் பிரதிநிதிகள் அப்துல் ரஹ்மான், மஞ்சு தாகூர், அ.வாகீசன், தாவரப் பாதுகாப்பு நிலையத்தின் பிரதி இயக்குநர் பீ.ரீ.பண்டார மற்றும் பிரதி விவசாயப் பணிப்பாளர் அ.செல்வராசா ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.

மேலும் படங்களுக்கு..

Related Posts