Ad Widget

வில்பத்தில் சேதமில்லை: வடக்கில் பிரேரணை நிறைவேற்றம்

வில்பத்து சரணாலயத்தில் மீண்டும் குடியேறியமையால், அந்தச் சரணாலயத்துக்கு எவ்விதமான சேதங்களும் ஏற்படவில்லை என்று, வடமாகாண சபையில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

வடமாகாண சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினரான வீ.ஜயதிலக்க என்பவரினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனையே இவ்வாறு நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த யோசனையை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பியான ஏ.ஐயூப் வழிமொழிந்தார்.

செவ்வாய்க்கிழமை சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட பிரேரணையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“வில்பத்துவைக் கைப்பற்றிவிட்டனர் எனக்கூறி, பேருவளையில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது போது, வடக்கில் இனவாதத்தை கக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஊடகங்கள் சில, இனவாதக் கருத்துகளைப் பரப்பிவருகின்றன.

“வில்பத்தில் வசித்த மக்கள், 22 வருடங்களுக்குப் பின்னர், தங்களுடைய கிராமங்களுக்குத் திரும்பி வந்துள்ளனர். அவ்வாறு வந்து பார்த்தபோது, அங்கு வீடுகள் இல்லை. பாரிய மரங்கள் மட்டுமே வளர்ந்து இருந்துள்ளன. இந்த நாட்டில் வாழ்கின்ற, சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் இடம்பெயர்ந்திருந்தால், அவர்கள் தங்களுடைய சொந்த இடங்களுக்கு திரும்பிவந்து, அங்கு வாழ்வதற்கான உரிமை அவர்களுக்கு உள்ளது.

அந்த உரிமையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வடபகுதியில் இருந்து 1990 ஆம் ஆண்டு, இடம்பெயர்ந்த முஸ்லிம்களை மீள்குடியேற்றும் நடவடிக்கைகள் 2012ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டன. சட்டரீதியாகவே இச்செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Posts