Ad Widget

விரைவில் ‘சபாஷ் நாயுடு’ படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பம்

கமல்ஹாசன் இயக்கத்தில் இளையராஜா இசையில் கமல்ஹாசன், ஸ்ருதிஹாசன், ரம்யாகிருஷ்ணன், பிரம்மானந்தம் மற்றும் பலர் நடிக்க கடந்த வருடம் பிரம்மாண்டமான பூஜையுடன் ஆரம்பமான படம் ‘சபாஷ் நாயுடு’. முதல் கட்டப் படப்பிடிப்பு அமெரிக்காவில் ஆரம்பமான சில நாட்களிலேயே படத்தை இயக்குவதாக இருந்த டி.கே. ராஜீவ்குமார் உடல்நிலை சரியில்லாமல் போனது. அதனால் கமல்ஹாசனே படத்தை இயக்க ஆரம்பித்தார்.

அமெரிக்காவில் படப்பிடிப்பை முடித்து சென்னைக்கு வந்ததும் தன்னுடைய அலுவலக மாடியில் இருந்து தவறிவிழுந்தார் கமல்ஹாசன். ஜுலை மாதம் நடந்த அந்த விபத்தில் இருந்து கமல் மீள்வதற்கு மிகவும் சிரமப்பட்டார். தொடர்ந்து ஓய்வில் இருந்தவர் கடந்த சில வாரங்களாகத்தான் நன்றாகவே நடக்க ஆரம்பித்தார். டாக்டர்களின் ஆலோசனைப்படி படப்பிடிப்பை மீண்டும் நடத்துவதை தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தார்.

தற்போது மருத்துவர்கள் அனுமதி அளித்ததையடுத்து மீண்டும் படப்பிடிப்பை ஆரம்பிக்க உள்ளார் கமல்ஹாசன். பொங்கலுக்குப் பிறகு ஐதராபாத்தில் ‘சபாஷ் நாயுடு’ படத்தின் படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பமாக உள்ளதாம். எப்படியும் கோடை விடுமுறையிலாவது படத்தை வெளியிட வேண்டும் என கமல்ஹாசன் முடிவெடுத்துள்ளாராம்.

Related Posts