Ad Widget

விபத்து அதிகரிப்பதற்கு சாரதி பயிற்சிப் பாடசாலைகளே காரணம்; பொலிஸார் குற்றச்சாட்டு

meeting_jaffna_police_jeffreeyசாரதிப்பயிற்சிப்பாடசாலைகளில் பயிற்சிகளை வழங்கும் பயிற்றுவிப்பார்கள் மிகவும் நுணுக்கமான முறையில் சாரதிகளுக்கு பயிற்சிகளை வழங்க வேண்டும் என பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழ். மாவட்டத்தில் உள்ள சாரதிப்பயிற்சிப் பாடசாலைகளில் சாரதி அனுமதிப்பத்திரம் பெறுபர்களுக்கு பயிற்சிகளை வழங்கும் போது சரியான முறையில் வீதி ஒழுக்கவிதிகளை சொல்லிக் கொடுப்பதில்லை இதனாலேயே அதிகரித்த வீதிவிபத்துக்கள் ஏற்படுகின்றது. எனவே பயிற்றுவிப்பாளர்கள் வீதி ஒழுக்க விதிமுறைகளை நுணுக்கமான முறையில் அவர்களுக்கு பயிற்றுவிக்க வேண்டும் என யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.எம்.எம். ஜிவ்ரி தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணத்தில் பெரும்பாலான வீதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்துக்களும் அதிகரித்துள்ளதுடன் பயணிப்பவர்களின் கவனக்குறைவினால் வீதி விபத்துக்களும் அதிகரித்துள்ளன.

இதனால் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு கடந்த 5 மாத காலப்பகுதியில் மட்டும் 21 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே இவற்றிற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக அமைவது சாரதிகளது போதிய அறிவின்மையே.

இதனைக் கருத்திற் கொண்டு எதிர்வரும் காலங்களில் பயிற்சி பெறுபவர்களுக்கு போதியளவு விழிப்புணர்வினையும் பயிற்சிகளையும் வழங்குவது சாரதிப் பயிற்சிப் பாடசாலைகளின் பொறுப்பு ஆகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts