Ad Widget

வித்யா கொலை வழக்கு- ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழுவில் இருந்து ஒருவர் விலகல்!

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாணவி வித்யா கொலை வழக்கில், மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சுவிஸ் குமார் உள்ளிட்ட 5 பேர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழுவில் இருந்து ஒருவர் விலகியுள்ளார்.

அதன்படி, குறித்த ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்ட நீதிபதி S.துரைராஜா நேற்று அந்தக் குழுவில் இருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தான் சட்டமா அதிபர் திணைக்களத்தில் கடமையாற்றிய காலத்தில் இந்த வழக்கின் விவகாரங்களை மேற்பார்வையிட்டதால் இந்த மேன்முறையீட்டு விசாரணையில் இருந்து விலக தீர்மானித்ததாக நீதிபதி தெரிவித்தார். .

இதையடுத்து வழக்கு விசாரணை எதிர்வரும் ஜூலை 30ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி யாழ்ப்பாணம் – புங்குடுதீவு பகுதியில் பாடசாலை மாணவியான சிவலோகநாதன் வித்தியா படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக சுவிஸ் குமார் உள்ளிட்ட 5 பேருக்கு 2017ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts