வித்யா கொலை வழக்கு உட்பட முக்கிய வழக்குகள் யாழ் மேல் நீதிமன்றத்தில்

புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்யா கொலை வழக்கின் விளக்கமறியல் மற்றும், யாழ் தாதியர் வேலைநிறுத்தப் போராட்டத் தடையுத்தரவு உள்ளிட்ட 3 முக்கிய வழக்குகள் 10 ஆம் திகதி யாழ் மேல் நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.

வித்யா கொலை வழக்கின் விளக்கமறியல் தொடர்பான விசாரணை, மாற்றுத்திறனாளி பெண் மீதான கூட்டுப்பாலியல் வழக்கு, தாதியர் வேலைநிறுத்த தடையுத்தரவு ஆகிய மூன்று முக்கிய வழக்குகள் யாழ்.மேல் நீதிமன்றத்தில் எதிர்வரும் 10 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வித்யா பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தபட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களுடைய விளக்கமறியல் தொடர்பில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணை நடத்தப்படவுள்ளது.

இந்த விசாரணையின்போது, யாழ் மேல் நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பைப் பலப்படுத்துமாறு யாழ்ப்பாணம் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

அதேவேளை, அனுராதபுரம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வித்யா கொலை வழக்கு, சந்தேகநபர்கள் 9 பேரையும் யாழ் மேல் நீதிமன்றத்தில் முன்னிலை செய்யுமாறு நீதிபதி இளஞ்செழியன் சிறைச்சாலை அத்தியட்சகருக்கு அறிவித்தல் விடுத்துள்ளார்.

அத்துடன் யாழ் மேல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் முடிவுற்றுள்ள வாய் பேச முடியாத பெண் ஒருவர் மீது கூட்டுப் பாலியல் வல்லுறவு வழக்கு தொடர்பான தீர்ப்பும் அன்றைய தினம் வழங்கப்படவுள்ளது.

இதேவேளை கடந்த ஜுலை மாதம் 8 ஆம் திகதி யாழ் போதனா வைத்தியசாலையில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்த தாதியர் வேலை நிறுத்தத்திற்கு எதிராக விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையுத்தரவு தொடர்பான விசாரணையும் எதிர்வரும் 10 ஆம் திகதி யாழ் மேல் நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.

இந்த இடைக்காலத் தடையுத்தரவை நீடிப்பதா அல்லது இடைநிறுத்துவதா என்பது குறித்து நீதிபதி இளஞ்செழியன் அன்றைய தினம் கட்டளை பிறப்பிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts