விடுவிக்கப்பட்ட மீனவர்கள் 77 பேர் நானள மறுதினம் தாயகம் திரும்புகிறார்கள்

யாழ்ப்பாணம் சிறையில் இருந்த 66 மீனவர்களையும், வவுனியா சிறையில் இருந்த 11 மீனவர்களையும் இலங்கை அரசாங்கம் விடுதலை செய்துள்ளது.

77 மீனவர்களும் எதிர்வரும் 31-ந் திகதி காரைக்கால் துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு இந்திய அதிகாரிகளிடம் கையளிக்கப்படவுள்ளனர்.

எல்லை தாண்டியதாக தமிழக மீனவர்கள் 92 பேர் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டு யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் மன்னார் சிறைகளில் அடைக்கப்பட்டனர்.

160-க்கும் மேற்பட்ட படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

பிரதமர் மோடி ராமேசுவரத்தில் நடந்த அப்துல்கலாம் மணிமண்டபம் திறப்பு விழாவில் பங்கேற்றார்.

அப்போது, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமரிடம் கோரிக்கை விடுத்தார்.

இந்த நிலையில் இலங்கை அரசு யாழ்ப்பாணம் சிறையில் இருந்த 66 மீனவர்களையும், வவுனியா சிறையில் இருந்த 11 மீனவர்களையும் (மொத்தம் 77 மீனவர்கள்) விடுதலை செய்துள்ளது.

Related Posts