Ad Widget

விடுவிக்கப்பட்ட காணிகளின் இயற்கை வளங்களை அபகரிக்கும் திருடர்கள்! அதிகாரிகள் பாராமுகம்!!

அண்மையில் இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக இருந்து மக்கள் மீளக்குடியேற அனுமதிக்கப்பட்ட பலாலி வயாவிளான் மற்றும் தையிட்டி பகுதிகளில் உள்ள மக்கள் தமது காணிகளில் உள்ள இயற்கை வளங்களை கூட பாதுகாக்க முடியாத நிலமையில் காணப்படுகின்றார்கள்.

கடந்த இருபத்தைந்து வருடங்களாக இடம்பெயாந்து தமது வீடு வாசல்களை இழந்து சொத்துக்களை இழந்து பல்வேறு துன்ப துயரங்களுக்கும் உள்ளாகிய மக்களின் காணிகளில் உள்ள இயற்கையாக கிடைத்த மரங்களைக் கூட பொலிஸ் மற்றும் அரச அதிகாரிகளின் செல்வாக்குடன் திருடர்கள் வெட்டிச்செல்கின்றனர் என கவலை தெரிவித்துள்ளார்கள்.

கடந்த காலங்களிலும் கூட மக்கள் மீளக்குடியேற அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் எஞ்சியுள்ள வீடுகளின் கூரைகள், யன்னல்கள், கதவுகள் உட்பட பல பொருட்களையும் திருடிச்சென்றதை அரச அதிகாரிகளும் கிராம அலுவலர்கள் மற்றும் பொலிஸாரும் நன்கு அறிவர்.

இத்தகைய நிலையில் கட்டம் கட்டமாக உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்து காணிகள் விடுவிக்கப்படும் நிலையில் கடந்த கால அனுபவத்தின் அடிப்படையில் இத்தகைய திருடர்கள் விடயத்தில் கிராம அலுவலர்கள் உட்பட அனைவரும் உரிய கவனம் எடுத்து இத்தகையவர்களைக் கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

காணிகளின் உரிமையாளர்கள், காணிகளை துப்பரவு செய்து அந்த மரந் தடிகளை தற்போது உள்ள இடங்களுக்கு கொண்டு செல்வது என்றாலே பல நடைமுறைகளை பின்பற்ற வேண்டிய நிலையில திருடர்கள் இரவுடன் இரவாக பெறுமதி மிக்க பெரும் மரங்களை மிகவும் உரிமையுடன் வெட்டி எடுத்து செல்லும் நிலைமை காணப்படுகின்றது.

இதனையிட்டு யாரிடம் முறையிடுவது என்று தெரியாது காணிகளின் உரிமையாளர்கள் திண்டாடுகின்றார்கள்.

Related Posts