கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் விசர்நாய் கடிக்கு உள்ளான நிலையில், உரிய மருத்துவ சிகிச்சை பெறத்தவறிய முதியவர் ஞாயிற்றுக்கிழமை (20) இரவு உயிரிழந்துள்ளதாக, யாழ். போதனா வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன.
இச் சம்பவத்தில், அரியாலை யாழ்ப்பாணம் பகுதியினைச் சேர்ந்த சின்னத்துரை சிறிஅன்பழகன் (வயது 64) என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் மேற்படி முதியவர் மதுபோதை தலைக்கேறிய நிலையில் வீதியால் நடந்து வந்துள்ளார்.
இதன்போது, இவரை தெருவில் அலைந்து திரிந்த விசர் நாய் கடித்துள்ளது. எனினும், குறித்த நபர் அதனைப் பொருட்படுத்தாமல் உரிய மருத்துவ சிகிச்சை பெறவில்லை.
இந் நிலையில், நேற்றுக் காலை திடீர் நெஞ்சுவலியினால் அவதிப்பட்ட முதியவரை, யாழ். போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று சிகிச்சை வழங்கப்பட்டபோதும் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.
இறப்பு விசாரணைகளை யாழ். போதனா வைத்தியசாலையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
விசர்நாய் கடித்ததினால் ஏற்பட்ட நோய்தொற்றே மேற்படி முதியவர் உயிரிழக்கக் காரணம் என வைத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.