வாள் வெட்டு கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்

வடமாகாணத்தில் இடம்பெறும் குழு மோதல்கள், வாள் வெட்டு கலாசாரம் என்பவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க பொலிஸார் மற்றும் சட்டத்துறை சார்ந்தோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என யாழ்.பல்கலைகழக கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் தெ.இந்திர குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

பல்கலை கழக மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்ய கோரியும் கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்க கோரியும் யாழ். பல்கலைகழக மாணவர்கள் வகுப்பு பகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈட்டுள்ளதுடன் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினையும் திங்கட்கிழமை (27) மேற்கொண்டனர்.

கவனயீர்ப்பு போராட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து அவர் தெரிவிக்கையில்,

குறிப்பாக யாழ்ப்பாணத்தில் தற்போது குழு மோதல்கள், வாள் வெட்டு கலாசாரம் என்பன அதிகரித்து காணப்படுகின்றது.

அவற்றினை கட்டுப்படுத்தி பல்கலைகழக மாணவர்கள் மற்றும் பொது மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தபட வேண்டும். அதற்கு பொலிஸ் மற்றும் சட்டத்துறையை சார்ந்தோர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அவ்வாறான சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டாலும் அவர்கள் மிக விரைவில் வெளியில் வருகின்றார்கள்.

எனவே, சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் மீது இறுக்கமான நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்டனைகள் கடுமையானதாக வழங்கப்பட வேண்டும்.

பல்கலைகழக மாணவர்கள் மீது கடந்த சனிக்கிழமை வாள் வெட்டினை மேற்கொண்ட கும்பலை கைது செய்ய வேண்டும் என கோருவதுடன், கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்ட இரு மாணவர்களையும் வழக்கில் இருந்து பூரணமாக விடுவிக்க வேண்டும் என கோருவதாக மேலும் அவர் தெரிவித்தார்.

Related Posts