Ad Widget

‘வாள்வெட்டுக் குழுக்களுக்கு பெயர் சூட்டவேண்டாம்’

யாழ். மாவட்டத்தில் இடம்பெறும் வாள்வெட்டு சம்பவங்களுடன் கைது செய்யப்படும் குழுக்களுக்கு பெயர்கள் சூட்டவேண்டாம் என்று வலிகாமம் தெற்கு (உடுவில்) பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா பிரகாஸ் தெரிவித்தார்.

யாழ். மாவட்ட சிவில் பிரதிநிதிகள் கலந்துரையாடல் யாழ்.மாவட்டச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (05) நடைபெற்ற போது, வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரிடமே பிரகாஸ் இவ்வாறு கூறினார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

யாழ். மாவட்டத்தில் தற்போது குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளன. வாள்வெட்டுச் சம்பவங்கள் அதிகமான இடம்பெறுகின்றன. ஒருவர் ஒரே குற்றத்துக்காக பலதடவைகள் கைது செய்யப்படுகின்றார்.

இதற்கு வழங்கப்படும் தண்டனைகள் உறுதி செய்யப்படவேண்டும். நீதிமன்றில் இவர்களுக்கு பிணை வழங்குவது தொடர்பில் நீதிபதி பொலிஸாரிடம் கேட்டே பிணை வழங்குகின்றார். பொலிஸார் சரியான அணுகுமுறைகளை மேற்கொள்ளவேண்டும்.

வாள்வெட்டு, கஞ்சா போதைப்பொருள் போன்ற சமூக கலாசாரங்கள் கடந்த காலங்களில் எமது சமூகத்தில் காணப்படவில்லை. தற்போது உருவெடுத்துள்ளது. தமிழீழ சட்டத்தில் தண்டனைகள் பெரிதாக இருந்தன. குற்றவாளிகள் வழக்கறிஞர்களை அணுகுவதற்கு இடமிருந்ததில்லை.

பொலிஸார் பொதுமக்களுடன் இணைந்து வலுவான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

இதற்குப் பதிலளித்த சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க,

கைது செய்யப்படும் குழுக்களுக்கு பொலிஸார் பெயர் சூட்டவில்லை. அவர்களது சமூகம் தான் பெயர் சூட்டுகின்றது. அதை ஊடகங்கள் பெரிதாக வெளிப்படுத்துகின்றன.

குற்றவாளிகள் நீதிபதியை அணுகுவதற்கு இலங்கை சட்டத்தில் ஆரம்பத்தில் இருந்து இடமுள்ளது. மற்றப்படி காட்டுச் சட்டங்களை எல்லாம் நாம் கவனத்தில் எடுக்க முடியாது என்றார்.

Related Posts