வவுனியா நொச்சிமோட்டை பகுதியில் இரு கிராமத்தவர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு நெச்சிமோட்டை பகுதிக்கு வந்த புதிய சின்னக்குளத்தை சேர்ந்த சுமார் 100 பேர் அப்பகுதியில் இருந்த வர்த்தக நிலையமொன்றினுள் புகுந்து அங்கிருந்த பொருட்களை அடித்து உடைத்ததுடன் உரிமையாளரையும் தாக்கியுள்ளனர்.
இதனையடுத்து கடை உரிமையாளரும் அங்கிருந்தவர்களும் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து மோதல் முடிவுக்கு வந்தது. அப்பகுதிக்கு வருகை தந்த ஓமந்தை பொலிஸார் அப்பிரசேத்தில் தேடுதலை நடத்தியதுடன் சம்பவம் தொடர்பாகவும் கேட்டறிந்துகொண்டனர்.
கடந்த சனிக்கிழமை புதிய சின்னக்குளத்தை சேர்ந்த இளைஞனொருவரை சிலர் தாக்கியதில் குறித்த இளைஞர் வவுனியா பொது வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந் நிலையில் குறித்த இளைஞனை தாக்கியவர்களுக்கு எதிராக பொலிஸார் நடவடிக்கை எடுக்காததன் காரணமாகவே அவர்கள் இவ்வாறு தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகின்றது.