Ad Widget

வளலாய் காணி உரிமையாளர்கள், துப்புரவு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்

உயர் பாதுகாப்பு வலயமாக இருந்து விடுவிக்கப்பட்டுள்ள வளலாய் பிரதேசத்தில், காணி உரிமையாளர்கள் துப்புரவு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

valavai-clening-1

வளலாய் ஜே – 284 கிராம அலுவலர் பிரிவு மக்கள், அவர்களின் காணிகளைச் சென்று அடையாளப்படுத்த வெள்ளிக்கிழமை (13) அனுமதி வழங்கப்பட்டது.

உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து தற்போது விடுவிக்கப்பட்டிருக்கும் வளலாய் ஜே – 284 கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த 272 குடும்பங்கள் தமது 232 ஏக்கர் காணிகளை கடந்த வெள்ளிக்கிழமை (13) அங்கு சென்று அடையாளப்படுத்தினர்.

அதனையடுத்து காணி உரிமையாளர்கள், காணிகளை அடையாளப்படுத்தி துப்புரவு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அது தொடர்பில் காணி உரிமையாளர்கள் கருத்து தெரிவிக்கும் போது,

துப்புரவு பணிகளை மேற்கொள்வதற்கு கூலிக்கு ஆட்களை அமர்த்தினால், ஒரு பரப்பு காணியினை துப்புரவு செய்ய 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரையில் கூலி கேட்கின்றார்கள்.

அதனால், நாங்களே எமது காணிகளை துப்புரவு செய்து வருகின்றோம். நாங்கள் கடற்தொழில் செய்வதனால் இரவில் தொழிலுக்கு சென்று விட்டு காலையில் காணி துப்புரவாக்குவதற்காக, தற்போது இருக்கும் வீட்டில் இருந்து சமைத்து சாப்பாட்டை கட்டிக்கொண்டு குடும்பமாக வந்து காணிகளை துப்புரவு செய்கின்றோம்.

பின்னர் மாலை துப்புரவு வேலைகளை முடித்துக்கொண்டு வீடுகளுக்கு சென்று இரவு கடற்றொழிலுக்கு செல்கின்றோம்.

valavai-clening-2

நாம் காணிகளை துப்பரவு செய்வதற்கு கத்தி, கோடரி, மண்வெட்டி, அலவாங்கு போன்ற உபகரணங்கள் இல்லாமையால் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றோம்.

எமக்கு காணிகளை துப்புரவு செய்வதற்கு ஏதுவாக உபகரணங்களை தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கின்றோம் என தெரிவித்தனர்.

Related Posts