Ad Widget

வலுக் குறைந்தது தாழமுக்கம்: மழை படிப்படியாகக் குறையும்

2015.11.16 ஆம் திகதி காலை காலை 05.30 மணிக்கு வழங்கப்பட்ட வானிலை முன்னறிவிப்பு:

நேற்றைய தினம் வங்காளவிரிகுடாப் பகுதியில் திருகோணமலைக்கு அருகில் காணப்பட்ட தாழமுக்கமானது தற்போது அதன் வலு குறைவடைந்து இலங்கையை விட்டு அப்பால் நகர்கின்றது. இது நாளை பிற்பகல் இந்திய தமிழ் நாட்டு கரையோரத்திற்கு நகரும் என உதிர்பார்க்கப்படுகிறது.

இதன் தாக்கத்தினால் நாட்டின் வட பிராந்தியத்திலும் தென்மேற்கு கரையோர பிரதேசங்களிலும் இன்றும் மழை தொடரும்.

இலங்கையிலும் இலங்கைத் தீவைச் சுற்றியுள்ள கடல் பிராந்தியங்களில் சற்றுப் பலமான காற்று வீசும்.

இருந்த போதிலும், கடந்த சில நாட்களாக காணப்படும் இந்த மழையான காலநிலை நாளை ஓரளவு குறைவடையும்.

கடல் பிராந்தியங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு:

மன்னார் வளைகுடா கடல் பிராந்தியங்களிலும் வட கடல் பிராந்தியங்களிலும் மழை காணப்படும். இது நாளை முதல் சற்றுக் குறைவடையும். மன்னார் முதல் காங்கேசன்துறை ஊடான முல்லைத்தீவு வரையான கடல் பிராந்தியங்கனில் கூடுதலான மழை காணப்படும்.

கடல் பிராந்தியங்களில் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 30 கிலோ மீற்றர்முதல் 40 கிலோமீற்றர் வரையான வேகத்தில் தென்மேற்குத் திசையிலிருந்து காற்று வீசும். இந்தக் காற்றின் வேகமானது சில சந்தர்ப்பங்களில் புத்தளம் முதல் மன்னார், காங்கேசன்துறை ஊடான முல்லைத்தீவு வரையான கடல் பிராந்தியங்கனில் மணித்தியாலத்திற்கு 70 கிலோமீற்றர்முதல் 80 கிலோமீற்றர் வரையான வேகத்தில் அதிகரித்து வீசலாம்.

மீனவர் சமூகம் மற்றும் கடல்சார் தொழிலாளர்கள் மேற்கூறப்பட்ட கடல் பிராந்தியங்களில் தமது கடல் நடவடிக்கையின்போது மிகவும் விழிப்புடன் செயற்படும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

க.சூரியகுமாரன்,
வளிமண்டலவியல் ஆராய்ச்சித் திணைக்களம்.

Related Posts