வலிகாமம் வடக்குப் பிரதேச சபையின் கீழுள்ள வீதிகளில் புனரமைப்புக்காக சபையில் இந்தாண்டு வரவு – செலவுத் திட்டத்தில் 12.2 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வலிகாமம் வடக்குப் பிரதேச சபை தவிசாளர் சோ.சுகிர்தன் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
எமது பிரதேச சபை வருமானம் குறைந்த பிரதேச சபையாக இருக்கின்றது. இருந்தும் வீதி புனரமைப்புக்காக அதிக நிதி ஒதுக்கீடு செய்துள்ளோம்.
அளவெட்டி மத்தியில் பள்ளியாவத்தை வீதி, அளவெட்டி கிழக்கிலே சீரட்டிபாய் வீதி, தம்மலை காட்டுப்புலவீதி, அளவெட்டி மேற்கு மல்லாகம் காளி கோயில் குறுக்குவீதி, மல்லாகம் அளவெட்டி முதலாம் குறுக்கு வீதி, தெல்லிப்பழை சைவப்பிரகாசம் வீதி, இளவாலை கிறேசல் வீதி போன்றவை புனரமைக்கப்படவுள்ளன.
45 கிராமஅலுவலர் பிரிவுகளை உள்ளடக்கிய எமது கிராம அலுவலர் பிரிவில் அரைவாசி கிராம அலுவலர் பிரிவுகள் உயர்பாதுகாப்பு வலயமாக இருக்கின்றன. விடுவிக்கப்பட்டு வரும் இடங்களுக்கான தேவைகள் அதிகமாகவுள்ளது.
கிணற்றில் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கான குடிநீர் விநியோகத்தை மேற்கொண்டு வருகின்றோம்.
இதுவரையில் 6 இலட்சம் ரூபாய்க்கு அதிகமாக செலவு செய்துள்ளோம் என்றார்.