Ad Widget

வலிப்பு நோய் சம்பந்தமாக ஒவ்வொருவரும் தெரிந்திருக்க வேண்டியவை.

  1. வலிப்பு வியாதி என்றால் என்ன?வலிப்பானது மூளையின் நரம்புக்கலங்களில் சடுதியாக ஒரே நேரத்தில் ஏற்படும் அதிகரித்த இயக்கத்தின் வெளிப்பாடு ஆகும். வலிப்பு வியாதியினால் அவதியுறுபவருக்கு இலகுவில் ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்ப்பட்ட வலிப்புகள் வருவது மட்டுமல்லாது இதன் தாக்கத்தினால் ஞாபகசக்தியின்மை நுண்ணறிவு குன்றுதல் உளவியல் மற்றும் மன அழுத்தம் போன்றவற்றினாலும் பாதிப்புகள் ஏற்டலாம்.
  2. வலிப்பு வருவதற்குரிய காரணிகள் எவை?
    1. நிறமூர்த்தத்தில் ஏற்படும் குறைபாடுகள் ( அரிதானது)
    2. மூளையில் ஏற்படும் காயம் அல்லது வடு
    3. காரணிகள் அறியப்படாமை (பொதுவானது)
  3. முதன்முறையாக ஒருவருக்கு வலிப்பு வந்திருந்தால் அவரை எவ்வாறு அணுகி ஆராய வேண்டும்?
    1. அந்த வலிப்பு வர ஏதுவாக இருக்ககூடிய காரணிகள் பற்றி ஆராய வேண்டும்
      1. காய்ச்சல் (குறிப்பாக சிறுபிள்ளைகளிற்கு 1- 6 வயது வரை)
      2. நித்திரையின்மை
      3. உரிய நேரத்தில் உணவு உண்ணாமை
    2. வலிப்பு எவ்வாறு தொடங்கி எவ்வாறு முடிகின்றது என்பது பற்றி ஆராய வேண்டும்.
      1. ஆரம்ப வலிப்பின் அறிகுறிகள் (aura)¨ கைகள் / கால்கள் இறுக்கமடைதல்¨ தலை / கண்கள் ஒரு திசையை நோக்கித் திரும்பிச் செல்லுதல்.¨ கைகள் / கால்கள் உதறுதல்

        ¨ வெறுமனே ஓர் இடத்தைப் பார்த்தல்

        ¨ வேறுபட்டு கதை்தல்

        ¨ செய்யும் செயல்களில் தடை ஏற்படுதல்

        ¨ வாயைச் சப்புதல் ( Automatism)

        ¨ கைகளால் ஆடைகளைப் பிசைதல்

        ¨ மூக்கைத் துடைத்தல் (Nose wiping)

        ¨ காரணமின்றி நடந்து திரிதல்

      2. வலிகளின் போது கவனிக்கப்பட வேண்டியவைகள்¨ அறிவிழத்தல் ( Loss of Conciousness)¨ கைகள், கால்கள் இரண்டும் உதறல் எடுத்தல்
      3. வலிப்பின் பின்னால் இடம்பெறும் நிகழ்வுகள் பற்றி அறிதல்.¨ மயக்கமடைந்த நிலையில் இருத்தல்¨ வாந்தி எடுத்தல்¨ தலையிடி

        ¨ கதைப்பதில் தடுமாற்றம் ( confusion) பேச்சு அற்று இருத்தல் ( aphasia)

        ¨ உடலின் ஒரு பகுதி செயலற்று இருத்தல்

  4. சிறுவயதில் குறிப்பாக 1 – 6 வயதினருக்கு வரும் காய்ச்சலுடனான வலிப்பு பாரதூரமானதா?இல்லை இதைக் காய்ச்சல் வலிப்பு என்றே கூறுவோம். இது அனேகமாக ஆறுவயதிற்கு பின் ஏற்படமாட்டாது. உடலின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்துவதன் மூலம் இதனை முழுமையாகக் கட்டுப்படுத்தலாம்.
  5. வலிப்பு நோயினால் அதிகளவில் பாதிக்கப்பட்டவர்களது உடல் அமைப்பில் காணப்படும் நோயின் அறிகுறிகள் எவை?
    1. தலையின் சுற்றளவு சிறிதாக இருக்கலாம்
    2. தோலின் கீழ் கட்டிகள் தென்படலாம் அல்லது தோல் வெளிறிக் காணப்படும்.
    3. கண்கள், காதுகளில் குறைபாடு இருக்கலாம்.
    4. முகத்தின் அமைப்பில் மாற்றம் இருக்கலாம் (Dysmorphism)
  6. வைத்தியருக்கு நோய்பற்றி அறிவிக்க நோயாளரின் பாதுகாவலரான நீங்கள் எவ்வாறு உதவி புரிய வேண்டும்.
    1. கேள்வி இல 3 இன் விடயங்களை கவனமாக உற்றுநோக்கி வைத்தியரிடம் தெரிவிக்கலாம்.
    2. வலிப்பை அதன் ஆரம்ப நிகழ்வில் இருந்து முடியும்வரை தொலைபேசி காணொளியில் (video recording) பதிந்து வைத்தியரிடம் காட்டலாம்.
    3. வலிப்பு நோய் அடிக்கடி வருமாயின் உடனடியாக மருத்துவ உதவிக்காக அருகில் உள்ள வைத்தியசாலைக்கு எடுத்துவரலாம்.
  7. சிறுபிள்ளைகளுக்கு வலிப்பு ஏற்படின் எவ்வகையான முக்கிய தகவல்களை வைத்தியரிடம் தெரிவிக்க வேண்டும்.
    1. கர்ப்ப காலத்தில் தாய்க்கு ஏற்ப்பட்ட நோய்கள்
    2. தலையில் அடிபடுதலும் அதன் தொடர்ச்சியானதுமான விடயங்கள்
      1. மயக்கடைதல்
      2. வாந்தி எடுத்தல்
      3. வலிப்பு
      4. ஞாபகசக்தியின்மை
    3. குடும்பத்தின் ஏனைய அங்கத்தவர்களின் வலிப்பு நோய்பற்றிய தகவல்கள்
    4. குழந்தையின் வளர்ச்சிப்படிகளில் காணப்படும் ஏதாவது பின்னடைவுகள்.
    5. தோலில் ஏற்படும் மாற்றங்கள் ( தோலில்கட்டிகள் ஏற்படுதல் அல்லது தோலின் நிறம் குன்றுதல்)
  8. வலிப்பு நோயாளிக்கு அடிக்கடி வலிப்பு வருமாயின் என்ன காரணங்களை இனங்காணுதல் முக்கியமானது?
    1. முன்னர் இனங்காணப்பட்ட வலிப்பு நோயின் வகை தவறானதாக இருக்கலாம்
    2. இது ஒரு போலியான வலிப்பாக இருக்கலாம்
    3. உடல் அனுசேபத்துடன் தொடர்பாக நோயாகவும் இருக்கலாம் (Metabolic desease)
    4. வலிப்பு மாத்திரைகள் செயலிழந்திருக்கலாம்.
    5. வலிப்புக்கு காரணமாக நரம்பியல் சம்பந்தமான நோயின் வீரியம் அதிகரித்து வரலாம்.
    6. தகாத மருந்து வழங்கப்பட்டிருக்கலாம்
  9. எனது பிள்ளைக்கு காக்கைவலிப்பு இருந்தால் என்ன செய்வது?
    காக்கை வலிப்பிற்கான முன்னர் குறிப்பிடப்பட்ட குணங்குறிகள் இருக்குமாயின் உடனடியாக தகுந்த வைத்தியரிடம் ஆலோசனை பெறுதல் இன்றியமையாதது.
  10. ஒருவருக்கு வலிப்பு ஏற்பட்டுவிட்டால் எவ்வாறு அவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்.
    1. வலிப்பு வந்தமைக்கான காரணிகளை ஆராய வேண்டும்
    2. வலிப்பானது 30 நிமிடங்கள் வரை நீடிக்குமாயின் வலிப்பிற்கான மருந்துகளை உபயோகிக்கவேண்டி தேவை ஏற்படலாம்.
    3. தலைப்படம் (CT Scan / MRI)  தலைப்பட்டி (EEG) என்பன தேவைப்படின் எடுக்க வேண்டி ஏற்படும்.
  11. “ஒருமுறை ஏற்பட்ட வலிப்பு மீண்டும் ஏற்படுமா” என்பதை எவ்வாறு இனங்காணலாம்?
    இதன் போது சோதிக்கப்படும் தலைப்பட்டி அல்லது தலைப்படம் என்பவை சாதாரணமானவையாயின் அந்நோயாளிக்கு மீண்டும் வலிப்பு ஏற்படாமல் இருப்பதற்கான வாய்ப்புகள் ஏறத்தாழ 70 வீதம் ஆக இருக்கலாம்.
  12. காக்கை வலிப்பை முற்றாக குணப்படுத்த முடியுமா?வேறுபட்ட மருந்து மாத்திரைகளால் 75 வீதமான வலிப்பு நோயளிகளிற்கும் சத்திர சிகிச்சை மற்றும் விசேட தூண்டல் முறைகள் மூலம் (Vagal stimulation)  மேலும் 10 வீதமான நோயாளிகளுக்கும் வலிப்பினை குணப்படுத்த முடியும். இதன்படி பார்க்கையில் ஒட்டுமொத்தமாக 85 தொடக்கம் 90 வீதம்வரை நோயைக் குணப்படுத்த வாய்ப்புகள் உள்ளன.
  13. எல்லா வலிப்புகளிற்கும் மருத்துவ சிகிச்சை அவசியமானதா?
    இல்லை பின்வரும் வலிப்பு வகைகளிற்கு பொதுவாக மருந்து மாத்திரைகள் தேவையில்லை.

    1. காய்சலுடனான வலிப்பு
    2. நீண்டகாலத்திற்கு ஒருமுறை ஏற்படும் வலிப்பு
  14. காக்கை வலிப்புள்ள பிள்ளைகள் சாதாரண பிள்ளைகளைப் போன்று கல்வி கற்க முடியுமா?
    ஆம், இவர்கள் சாதாரண பிள்ளைகளைப் போன்று விளையாடவும் கல்வி கற்கவும் முடியும், இவர்களை சாதாரண பிள்ளைகளைப்போன்று எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி விளையாட்டிலும் கல்வியிலும் ஊக்கப்படுத்துதல் வேண்டும்.
  15. வலிப்பு வியாதியினால் பாதிக்கப்பட்ட பிள்ளைகள் அதிக கவனத்துடன் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமானதா?
    இல்லை, அளவுக்கு அதிகமாக இப் பிள்ளைகள் பாதுகாக்கப்பட்டால் இவர்களின் மனவளர்ச்சி குன்றிவிடும். இவர்களினால் சாதாரண வாழ்க்கைச் சவால்களை எதிர்கொள்ள இயலாமல் போய்விடும். இந்நிலைக்கு காக்கை வலிப்பு நேரடிக்காரணமாகாது.
  16. இந்நோயை பேய், பிசாசு, விரட்டுதல், மாந்தீரிகம் பார்த்தல் போன்ற முறைகள் மூலம் குணப்படுத்த முடியுமா?
    இவை விஞ்ஞான ரீதியான சிகிச்சை முறைகள் அல்ல.
  17. வகுப்பறையில் மாணவன் ஒருவனுக்கு வலிப்பு வந்தால் என்ன செய்ய வேண்டும்?
    1. காயம் ஏற்படாதவாறு அருகிலிருக்கும் கதிரை, மேசைகளை விலக்கி விட வேண்டும்.
    2. நோயாளியை ஒரு பக்கமாகப் படுக்க வைக்க வேண்டும்.
    3. ஏனைய மாணவர்களை வலிப்புடையவரை சுற்றி நிற்பதைத் தவிர்க்க வேண்டும்.
    4. வலிப்பு நீண்ட நேரத்திற்கு நீடிக்குமாயின் உடனடியாக அவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல வேண்டும்.
  18. காக்கை வலிப்புடைய பிள்ளையை பாடசாலையில் வைத்திருப்பது ஆபத்தானதா?வீட்டிலும் சரி பாடசாலையிலும் சரி வலிப்பு பெரும்பாலும் எதிர்பாராத சந்தர்ப்பங்களிலேயே ஏற்படுகின்றது. பாடசாலை செல்லும் வயதுடைய மாணவர்கள் வீட்டில் இருப்பதால் அவர்களின் கல்வி பாதிப்படைகின்றது. ஆசிரியர்கள் பிள்ளையை பூரணமாக குணமாக்கிய பின்தான் பாடசாலை அனுப்பும்படி பெற்றோரிடம் வலியுறுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
  19. காக்கை வலிப்புள்ள மாணவனை பாடசாலைக்கு அனுப்ப முன் பெற்றோராகிய நீங்கள் என்ன அறிந்திருத்தல் அவசியமாகும்?
    1. வலிப்பு நோய்க்குரிய மருந்தினை வைத்திய ஆலோசனைப்படி நேரத்திற்கு பிள்ளைகளிற்கு வழங்க வேண்டும்.
    2. நேரம் தவறாது நிறை உணவுவகைகளை பிள்ளைகளிற்கு வழங்குதல் வேண்டும்.
    3. பாடசாலைக்கு பிள்ளைகளை தனியே அனுப்புவதை தவிர்க்க வேண்டும்.
    4. வகுப்பாசிரியருக்கும் சக மாணவர்களுக்கும் இது பற்றி தெரியப்படுத்த வேண்டும்.
    5. நீச்சல் அடித்தல் மற்றும் மரம் ஏறுதல் தவிர்ந்த ஏனைய விளையாட்டுக்களில் பிள்ளைகளை அனுமதிக்க வேண்டும்.
    6. பிள்ளைகளை குறைந்தது ஆறு மணித்தியாலங்களாவது உறங்கவிட வேண்டும்.
  20. காக்கை வலிப்பு உடைய திருமண வயதினருக்கு எவ்வாறான ஆலோசனைகளை வழங்க விரும்புகின்றீர்கள்?
    அவர்கள் சந்தோசமான திருப்பதிகரமான திருமண வாழ்ககையை வாழலாம். இதற்கு வலிப்பு ஒரு தடையல்ல. அத்துடன் சாதாரண தம்பதிகள் போல் பிள்ளைகளையும் பெறலாம். ஆனால் குறிப்பாக பெண்பிள்ளைகள் திருமணத்திற்கு முன் இது சம்பந்தமாக வைத்திய ஆலோசனை ஒன்றைப் பெற்றிருத்தல் இன்றியமையாதது.
  21. வலிப்பு நோயுடையவர்கள் கர்ப்பம் தரித்தல் பற்றிய உங்கள் ஆலோசனைகள் எவை?
    1. இவர்கள் கர்ப்பம் தரிக்க எந்தவித தடையுமில்லை. ஆனால் கருத்தரிக்க முன் வைத்தியரின் ஆலோசனை ஒன்றைப் பெற்றிருத்தல் இன்றியமையாதது.
    2. எதிர்பாராத விதமாக கருத்தரித்திருந்தால் மருந்தை நிறுத்தாமல் கூடிய விரைவில் வைத்திய ஆலோசனையைப் பெறுங்கள்
    3. நீங்கள் மகப்பேற்று மருத்துவரை முதலில் சந்திக்கும் போது உங்களிற்கு வலிப்பு வியாதி இருப்பதைப் பற்றி தெரிவியுங்கள்.
    4. கர்ப்பம் தரிக்க முன்பிருந்தே போலிக் அசிட் (Folic Acid) எனப்படும் விற்றமின்களை எடுத்தல் அவசியம்.
    5. ஒழுங்கான உணவுப்பழக்கங்களும், ஒரளவு உறக்கமும் இக்காலத்தில் கடைப்பிடிப்பது அவசியமாகும்.
  22. வலிப்பு நோயுடையவர்கள் தொழில் பார்ப்பதில் ஏற்படும் பிரச்சினைகள் எவை?
    சாதரண தொழிலாளர் போல் இவர்கள் வேலை பார்க்கலாம். ஆனால் நீங்கள் வேலையைத்  தெரியும் முன் பின்வருவனவற்றைக் கருத்திற் கொள்ள வேண்டும்.

    1. வலிப்பு ஒரளவேனும் கட்டுபாட்டிற்குள் கொண்டுவரப்பட்டிருக்க வேண்டும்.
    2. பின்வரும் சந்தர்ப்பங்களை தவித்தல் வேண்டும்.
      1. ஆபத்தான இயந்திரங்களுடனான வேலை
      2. நெருப்புடனான வேலை
      3. உயரமான இடத்திலிருந்து செய்யும் வேலை.
      4. இரவு நேர வேலைகள்.

“காக்கை வலிப்பு உங்கள் வாழ்க்கையை இருள்மயமாக்காது
தைரியத்துடனும் விவேகத்துடனும் அதற்கு முகம்கொடுங்கள்”

Dr. திருமதி அஜந்தா கேசவராஜ்
விசேட நரம்பியல் நிபுணர்.
நரம்பியல் நோய்ப்பிரிவு
யாழ் போதனா வைத்தியசாலை.

ஏனைய கட்டுரைகள்

வீட்டு விபத்துக்களில் இருந்து சிறுவர்களை பாதுகாப்போம்

நீரிழிவு நோயாளியும் உடற்பயிற்சியும்

குடா நாட்டை அச்சுறுத்தும் பதின்மவயதுக் கர்ப்பம்!

Related Posts