2016 வரவுசெலவுக்கான இறுதி வாக்கெடுப்பு நேற்று (19) 109 மேலதிக வாக்குகளினால் நிறைவேறியது. ஆதரவாக 160 வாக்குகளும் எதிராக51 வாக்குகளும் கிடைத்துள்ளன.13 பேர் சமூகமளிக்கவில்லை.
எட்டாவது பாராளுமன்றத்தின் முதலாவது வரவுசெலவு திட்டம் கடந்த நவம்பர் 20ஆம் திகதி பிற்பகல் 2.00 மணிக்கு நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் 11 அத்தியவசிய பொருட்களின் விலை குறைப்புடன் சமர்ப்பிக்கப்பட்டது. ஐக்கிய தேசிய கட்சியும் ஶ்ரீலங்கா சுதந்திரகட்சியும் இணைந்து நல்லாட்சியின் முதலாவது வரவுசெலவு இதுவாகும்.
2016ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டத்துக்கு அங்கீகாரம் வழங்குவதற்காக விசேட அமைச்சரவை கூட்டமொன்றும் ஜனாதிபதி மைத்திரிபாலச சிறிசேன தலைமையில் கடந்த நவம்பர் மாதம் 20ஆம் திகதி காலை நடைபெற்றது. அதன் பின்னரே பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.
2016ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டத்தில அரசின் மொத்த செலவீனம் 3,138 பில்லியனாகவும் அரச வருமானம் 1.90 பில்லியனாகவும் அமையும் என எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
புதிய நல்லாட்சியின் மத்திய இடைக்கால பொருளாதார கொள்கை பிரகடனம், கடந்த நவம்பர் 5ஆம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் பாராளுமன்றில் வௌியிடப்பட்டது. இதனை அடிப்படையாகக் கொண்டே வரவுசெலவு திட்டம் தயாரிக்கப்பட்டது.
நவம்பர் 20ஆம் திகதி வரவுசெலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் நவம்பர் 22ஆம் திகதி சனிக்கிழமையே 2ஆவது வாசிப்பு மீதான விவாதம் ஆரம்பமானது.
இரண்டாவது வாசிப்பின் மீதான விவாதம் சனிக்கிழமை நாட்கள் அடங்கலாக டிசம்பர் 2ஆம் திகதி வரை நடைபெற்றது. 2ஆம் திகதி மாலை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இந்த வாக்கெடுப்பின் போது 107 மேலதிக வாக்குகளால் வரவுசெலவு நிறைவேற்றப்பட்டது. ஆதரவாக 159 வாக்குகளும் எதிராக 52 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எம்பி உட்பட 13 எம்பிக்கள் சபையில் இருக்கவில்லை. ஆனால் ஆறுமுகம் தொண்டமான், டக்ளஸ் தேவானந்தா, லஷ்மன் செனவிரத்ன, முத்துசிவலிங்கம், அங்கஜன் இராமநாதன், காதர் மஸ்தான் ஆகியோர் ஆதரவாக வாக்களித்தனர்.
அன்றைய வாக்கெடுப்பு சுனில் ஹந்துன்நெத்தியின் கோரிக்கைக்கமைய பெயர் குறிப்பிட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. வரவசெலவு திட்டத்தின் ஊடாக நிதியொதுக்கீட்டு குழுநிலை விவாதம் டிசம்பம் 3ஆம் திகதி முதல் ஆரம்பமானது.
சனிக்கிழமை நாட்களடங்களாக நேற்று (19) வரை 15 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்றன.
நேற்றுகாலை 9.30 மணிக்கு பாராளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள, உபாய முறைகள், சர்வதேச வர்த்தக, நிதி அமைச்சுக்களுக்கான நிதியொதுக்கீட்டு குழுநிலை விவாதம் ஆரம்பமானது.