Ad Widget

வட மாகாண சபை கொடுக்கப்பட்ட அதிகாரங்களுக்கு தமக்கு தேவையானவற்றை செய்யவில்லை!

வட மாகாண சபை அதிக அதிகாரங்களை கேட்கின்றது ஆனாலும் கொடுக்கப்பட்ட அதிகாரங்களுக்கு தமக்கு தேவையானவற்றை செய்யவில்லை என போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

வவுனியா, யாழ் வீதியில் அமைக்கப்பட்ட புதிய மத்திய பேருந்து நிலையத்தை மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிமல் சிறிபால நேற்று (திங்கட்கிழமை) திறந்து வைத்து உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர்,

‘வட மாகாண சபை தொடர்பில் எனக்கு ஒரு குறைபாடு உள்ளது. அவர்கள் அதிகமான அதிகாரங்களைக் கேட்கின்றனர். அதிகாரங்களைக் கேட்பது நியாயமானது. ஆனால் ஏற்கனவே கொடுத்த அதிகாரத்தினுள் செய்ய வேண்டிய வேலைகளை உரிய நேரத்தில் செய்யவில்லை.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இராணுவ முகாம்கள் அமைந்திருந்த பல பகுதிகளை விடுவித்து மக்களிடம் கையளித்துள்ளார். ஆனாலும் அதில் பயன் பெறக்கூடிய விடயங்களை வட மாகாணசபை இதுவரை செய்யவில்லை.

20 ஆயிரம் வீடுகளை அமைப்பதற்கு அரசாங்கம் நிதியினை கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்னர் ஒதுக்கியுள்ளது. ஒரு வீட்டிற்கு 2 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது ஆனாலும் இதுவரையில் எந்தவொரு வீடும் கட்டப்படவில்லை.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் சிறுபான்மை மக்களின் உரிமைகளை பெற்றுக் கொடுக்க பாடுபட்டு வருகின்றது. ஆகவே உங்கள் பகுதியில் உள்ள பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளுமாறு வட மாகாண சபையை வினையமாக கேட்கிறேன்’ என்றார்.

Related Posts