Ad Widget

வட மாகாணத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா!

வட மாகாணத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று(செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்களில் ஒருவர் பூநகரியில் சேவையாற்றும் தனங்களப்பு பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் 376 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அவர்களில் இருவருக்கு கொரோனா தொற்று உள்ளதாக அறிக்கை கிடைத்துள்ளது.

மன்னாரில் இருந்து யாழ்ப்பாணம் வந்த பேருந்தில் பயணித்தவர்களிடம் கேரதீவில் வைத்து பெறப்பட்ட மாதிரிகளின் அடிப்படையிலேயே அவர்கள் இருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஒருவர் மன்னாரைச் சேர்ந்தவர். மற்றையவர் தனங்களப்பு பகுதியைச் சேர்ந்த ஆசிரியை. அவர் பூநகரியில் சேவையாற்றும் நிலையில் பேருந்தில் பயணித்தவர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று 414 பேரின் மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அவர்களில் 3 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவர்கள் மூவரும் கிளிநொச்சி – கரைச்சி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்தவர்கள். அத்துடன் அவர்கள் கரைச்சியில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலை பணியாளர்கள்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts