SLS தரச்சான்றிதழ் முத்திரை இல்லாத, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பெண்களுக்கான சுகாதாரத் துவாய்களை உற்பத்தி செய்தல், பொதியிடல், விநியோகித்தல், எடுத்துச்செல்லல், களஞ்சியப்படுத்துதல் மற்றும் விற்பனை செய்தல் ஆகியவை எதிர்வரும் ஒக்டோபர் 8ஆம் திகதி முதல் தடைசெய்யப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது.

2003ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க நுகர்வோர் விவகார அதிகார சபைச் சட்டத்தின் 12(2) பிரிவின் கீழ் அதற்குரிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.
இலங்கை தரக்கட்டளைகள் நிறுவனத்தினால் (SLSI) வழங்கப்படும் SLS தரச்சான்றிதழ் முத்திரையைக் கொண்டிருந்தால் மட்டுமே அந்தத் தயாரிப்புகளை சந்தைக்கு வெளியிட முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவானது ஒருமுறை மாத்திரம் பயன்படுத்தக்கூடிய சுகாதாரத் துவாய்கள் மற்றும் ஒருமுறை மாத்திரம் பயன்படுத்தக்கூடிய மெல்லிய சுகாதாரத் அட்டைகள் ஆகியவற்றிற்குப் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இறக்குமதி செய்யப்படும் சுகாதாரத் துவாய்கள் இலங்கை தரக்கட்டளைகள் நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் இறக்குமதி தரப்படுத்தல் மற்றும் தரக்கட்டுப்பாட்டு பரிசோதனை முறைமையின் கீழ் பரிசோதிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டிருக்காவிட்டால், அவற்றை இறக்குமதி செய்தல், விநியோகித்தல், களஞ்சியப்படுத்துதல் அல்லது விற்பனை செய்வதும் தடைசெய்யப்படும் என அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
இலங்கை தரக்கட்டளைகள் நிறுவனத்தினால் தொடர்புடைய தரநிலைகளில் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் அனைத்து திருத்தங்களுக்கும் கூட இக்கட்டளை பொருந்தும் என நுகர்வோர் விவகார அதிகார சபை மேலும் அறிவித்துள்ளது.