Ad Widget

வட மாகாணத்தில் பாலியல் லஞ்சம் கோரும் தமிழ் அரச அதிகாரிகள்! சந்திரிக்கா குற்றச்சாட்டு

வட மாகாணத்தில் கணவனை இழந்த இளம் பெண்களிடம் இராணுவம் மட்டுமன்றி தமிழ் அரச ஊழியர்களும் பாலியல் இலஞ்சம் கோருவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

நல்லிணக்க செயற்பாடுகளை முன்னெடுக்கும் அலுவலகத்தின் பணிகள் தொடர்பில் ஊடகவிலாளர்களை தெளிவூட்டும் செயலமர்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

நீண்டகாலமாக புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாணும் பொற்காலம் உதயமாகியுள்ளதாகவும், இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் இரண்டு பிரதான கட்சிகள் இணைந்து செயற்படும் இந்த தருணத்தில் பல்வேறு குறைபாடுகள் ஏற்படலாம்.ஆனால் இன மத ரீதியில் கடந்த காலத்தில் ஏற்பட்ட பிரிவினை, முரண்பாடுகள் மீண்டும் ஏற்படாத வகையில் நிரந்தர நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதே எமது இலக்கு.

30 வருடப் போரினை கடந்த அரசாங்கம் தோற்கடித்த போதிலும் போராட்டம் ஏற்பட அடிப்படைக் காரணிகளாக இருந்த பிரச்சினையை தீர்ப்பதற்கும் அது சார்ந்த மக்களின் உரிமைகளை வழங்குவதற்கும் தவறியுள்ளது.எனவே, உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்துகின்ற பொறுப்பு புதிய அரசாங்கத்திடம் இருக்கின்ற காரணத்தால் அதற்கான செயலணி உருவாக்கப்பட்டது.இதற்கான பணிகளை முன்னெடுக்க ஊடகங்களும் ஒத்துழைக்க வேண்டும்.

அத்தோடு, நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பதற்கு விருப்பம் தெரிவித்துள்ள புலம்பெயர் அமைப்புக்களிடம் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.ஏனெனில், அவர்களின் ஒத்துழைப்பும் எமக்கு அவசியம் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts