Ad Widget

வட்டுவாகலில் வெடிபொருள் வெடித்ததில் இளைஞன் சாவு!!

முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்துக்கு அருகில் உள்ள கடற்படை முகாமுக்கு முன்பாக வெடிபொருள் ஒன்று வெடித்ததில் இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மற்றொரு இளைஞன் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் முல்லைத்தீவு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று பிற்பகல் 1.40 மணியளிவில் இடம்பெற்றது.

சம்பவத்தில் முல்லைத்தீவு செல்வபுரத்தைச் சேர்ந்த சந்திரகுமார் திஷாந்த் (வயது-19) என்ற இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அவருடன் சென்ற செல்வபுரத்தைச் சேர்ந்த செல்வக்குமார் சாந்தரூபன் (வயது-20) படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் முல்லைத்தீவு வைத்தியசாலையில் சிகிச்சை பெறுகின்றார்.

இருவரும் அந்தப் பகுதியில் நின்றிருந்த வேளை வெடிபொருள் ஒன்று வெடித்துள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர்.

இருவருக்கும் வயிற்றுக்கு கீழ் பகுதியில் படுகாயம் ஏற்பட்டுள்ளது.

ஆரம்ப விசாரணைகளில் கைக்குண்டு ஒன்று வெடித்திருக்கலாம் என நம்பப்படுகிறது. எனினும் சிறப்பு அதிரடிப் படையின் ஆராய்சியின் பின்னரே வெடிபொருள் தொடர்பில் கண்டறியப்படும் என்றும் பொலிஸார் கூறினர்.

Related Posts