வட்டுவாகலில் கடற்படைக்காக 617 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகள் சுவீகரிக்கப்படவுள்ளது. நாளை மறுதினம் இடம்பெறவுள்ள இந்த சுவீகரிப்பு நடவடிக்கையை தடுத்து நிறுத்த மக்களை போராட வருமாறு பாதிக்கப்படும் விவசாயிகள், மீனவர்களின் அமைப்புக்கள் அழைப்பு விடுத்துள்ளன.
இது தொடர்பில் தெரிய வருவதாவது
முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராம சேவை பிரிவுக்கு உட்பட்ட வட்டுவாகல் கிராமத்தில் 617 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகளை அங்கு நிலைகொண்டிருக்கும் கடற்படைக்கு சுவீகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான நில அளவை நாளை புதன்கிழமை செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவித்தலை அரச நில அளவையாளர் பா.நவஜீவன் எழுத்து மூலமாக பகிரங்க அறிவித்தல் விடுத்துள்ளார்.
புதன்கிழமை ஆரம்பிக்கப்படும் இந்த நில அளவை வெள்ளிக்கிழமை வரை தொடர்ந்து காலை முதல் மாலை வரை மேற்கொள்ளப்படும்.
இந்தப் பகுதியில் உள்ள காணி உரிமையாளர்கள் யாராவது இருப்பின் அவர்கள் உரிய ஆவணங்களுடன் நில அளவை செய்யப்படும்போது அங்கு சமுகமளிக்குமாறு அந்த அறிவித்தலில் கோரப்பட்டுள்ளது.
இந்த அறிவித்தல் முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராம சேவையாளர் அலுவலகத்தில் பொதுமக்களின் பார்வைக்காக ஒட்டப்பட்டுள்ளது.