Ad Widget

வடமாகாண விவசாய அமைச்சு மீது விசாரணை

வடக்கு மாகாண விவசாய அமைச்சு மீது முன்வைக்கப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், வெள்ளிக்கிழமை (24) யாழ்ப்பாண பொது நூலகத்தில் விசாரணை இடம்பெற்றுள்ளது. இந்த விசாரணையை வடக்கு மாகாண முதலமைச்சரால் நியமிக்கப்பட்ட குழு ஒன்று விசாரணை செய்திருந்தது. அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்த நிலையில், அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்கு முதலமைச்சரினால், விசாரணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டிருந்தது.

அமைச்சர்களுடைய செயற்பாடுகள் மந்த கதியிலும் ஊழல் கொண்டதாகவும் காணப்படுவதாக, உறுப்பினர்களால் சபையில் தொடர்ச்சியாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட நிலையில், அந்தக் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வது என தீர்மானிக்கப்பட்டு முன்னாள் நீதிபதிகளான எஸ்.தியாகேந்திரன், எஸ்.பரமேஸ்வரா மற்றும் முன்னாள் அரச அதிபர் எஸ். பத்மநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டிருந்தனர். வட மாகாண பிரதம செயலாளர் அலுவலகத்தில் செயற்படும் இந்த விசாரணைக்குழு ஆறு மாத கால எல்லையில் தமது விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் வடக்கு மாகாண விவசாய அமைச்சினால் கடந்த வருடங்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட இரணைமடு நீர்ப்பாசனத் திட்டம் தொடர்பிலான வடக்கு மாகாணத்தின் செயற்பாடுகள், பாதீன ஒழிப்பு தொடர்பான செயற்றிட்டங்கள், சுன்னாகம் நிலத்தடி நீர் மாசடைதல் போன்ற பல விடயங்களில் அமைச்சர் மீது உறுப்பினர்களால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது. இதே போன்று ஏனைய அமைச்சுக்கள் மீதும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில் நேற்றைய தினம் விவசாய அமைச்சு மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், அமைச்சர் ஐந்கரநேசனிடமும் விளக்கம் கோரப்பட்டது. மேலும் எதிர்க்கட்சி தலைவர் தவராசா மற்றும் சிலராலும் நேற்றைய தினம் விவசாய அமைச்சு மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தது.

Related Posts