வடமாகாண விவசாயக் கண்காட்சி மன்னார் உயிலங்குளத்தில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் நேற்று திங்கட்கிழமை (14.03.2016) ஆரம்பமாகியுள்ளது. தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறவுள்ள இக்கண்காட்சியை வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் திறந்து வைத்துள்ளார்.
வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் இக்கண்காட்சியின் தொடக்க நிகழ்ச்சி இடம்பெற்றது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிவசக்தி ஆனந்தன், ஸ்ரீ.சாந்தி, வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராசா, மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன், மாகாணசபை உறுப்பினர்கள் வைத்திய கலாநிதி ஞா.குணசீலன், பிறிமூஸ் சிராய்வா, க.தர்மலிங்கம் ஆகியோரும் திணைக்களங்களின் அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தார்கள்.
‘சந்தையை நோக்கிய சூழல் நேயமான விவசாயம்’ என்னும் தொனிப்பொருளில் அமைந்த இக்கண்காட்சியில் விவசாயத் திணைக்களம், கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம், நீர்ப்பாசனத் திணைக்களம், கூட்டுறவுத் திணைக்களம், மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனம், பனை அபிவிருத்திச்சபை, தென்னை அபிவிருத்திச்சபை, விதை ஆராய்ச்சிப்பிரிவு, விதை அத்தாட்சிப் பிரிவு போன்றவை காட்சிக் கூடங்களை அமைத்திருந்தன.
தொடக்க நாளான நேற்று ஏராளமான பாடசாலை மாணவர்களும், பொதுமக்களும் கண்காட்சியைப் பார்வையிட திரண்டிருந்தனர்.