Ad Widget

வடமாகாண முன்னாள் எதிர்க்கட்சி தலைவருக்கு விளக்கமறியல் நீடிப்பு

வடமாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சி உறுப்பினர் கந்தசாமி கமலேந்திரனை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 2ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் நேற்று உத்தரவிட்டார்.

Kamal

நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் டானியல் றெக்ஷிசன் கொலையின் பிரதான குற்றவாளி என்ற சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கமலேந்திரன் தொடர்பான வழக்கு, நேற்று செவ்வாய்க்கிழமை (19) ஊர்காவற்துறை நீதிமன்றில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதன்போது, கந்தசாமி கமலேந்திரன் மற்றும் டானியல் றெக்ஷிசனின் மனைவி மற்றும் மற்றைய இளைஞர் ஆகியோரை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 2ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

துப்பாக்கியினால் சுடப்பட்ட நிலையில் மூளையில் ஏற்பட்ட இரத்தக் கசிவினாலேயே றெக்ஷிசன் உயிரிழந்ததாக கடந்த ஜூலை 8ஆம் திகதி இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது வாசிக்கப்பட்ட மரண அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் டானியல் றெக்ஷிசன் கடந்த 2013ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் திகதி அவரது வீட்டில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டு சடலமாக மீட்கப்பட்டார்.

இந்தக் கொலை தொடர்பில் வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் கமலேந்திரனை 2013ஆம் ஆண்டு டிசெம்பர் 3ஆம் திகதி கொழும்பில் வைத்து பயங்கரவாதக் குற்றத் தடுப்புப் பிரிவினர் கைது செய்திருந்தனர்.

அத்துடன் றெக்ஷிசனின் மனைவி மற்றும் மேலும் ஒரு இளைஞர் ஆகியோரும் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts