Ad Widget

வடமாகாண தடகளப் போட்டி இன்று ஆரம்பம்

North-sportsவடமாகாண கல்வித் திணைக்களத்தின் மாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான தடகளப்போட்டி ஆரம்ப நிகழ்வு இன்று காலை 9.30 மணியளவில் வடமாகாண கல்வி, கலாசார பண்பாட்டலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தலைமையில் யாழ் துரையப்பா விளையாட்டரங்கில் ஆரம்பமானது.

பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுனர் ஜி.ஏ.சந்திரசிறி கலந்து கொண்டு விளையாட்டு நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார். மேலும் வடமாகாணத்திலுள்ள 12 வலயங்களைச் சேர்ந்த பாடசாலைகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட வீர, வீராங்கனைகள் மட்டுமே இந்த தடகளப் போட்டிக்கு பங்குபற்றவுள்ளனர்.

மேலும் இந்த நிகழ்வில் பிரதம விருந்தினர் உரையாற்றுகையில்,

கடந்த வருடம் ஆறாவது இடத்தில் இருந்த வடமாகாணம் இந்த முறை குறைந்தது நான்காம் இடத்திற்கு முன்னேற வேண்டும். அத்தோடு இந்தப் போட்டிக்கு தகுந்த பயிற்சிகளை மேற்கொண்ட வீர,வீராங்கனைகள் சிறந்த பெறுபேற்றை ஈட்டி தமது பாடசாலைகளுக்கும், வடமாகாணத்திற்கும் பெருமையை தேடித்தர வேண்டும் என்றார்.

மேலும் இந்த நிகழ்வுக்கு யாழ் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா, வடமாகாண செயலாளர் இளங்கோவன், வலயக்கல்வி பணிப்பாளர்கள், கோட்டக் கல்விப்பணிப்பாளர்கள்,விளையாட்டு நடுவர்கள், பாடசாலை அதிபர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Related Posts