Ad Widget

வடமாகாண சுகாதார அமைச்சால் 455 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டது

வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் திணைக்களங்களில் நீண்ட காலமாக அமைய, ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய 455 பேருக்கு நிரந்தர நியமனம் இன்று சனிக்கிழமை வழங்கப்பட்டது.

வடமாகாண சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் இன்று வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

கடந்த காலங்களில் குறிப்பாக நாட்டில் ஏற்பட்ட நெருக்கடியான காலகட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தரமான சுகாதார சேவையை வழங்கும் நோக்கில் ஒப்பந்த, அமைய அடிப்படையில் பலர் சேர்த்துக் கொள்ளப்பட்டிருந்தனர்.

இவர்களில், வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த 186 பேருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 106 பேருக்கும், மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 163 பேருக்குமாக 455 பேருக்கு இந் நியமனம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன், வினோநோதராதலிங்கம், வடமாகாண சபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், ம.தியாகராசா, சி.சிவமோகன், து.ரவிகரன், மேரிகமலா குணசீலன், அன்ரனி ஜெகநாதன், றிப்கான் பதியுதீன், தர்மபால செனவிரட்ன, ஜெயதிலக, வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ரவீந்திரன் மற்றும் வைத்திய அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதேவேளை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி பகுதிகளைச் சேர்ந்த 402 பேருக்கு கடந்த 19 ஆம் திகதி கிளிநொச்சியில் வைத்து நியமனம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts