Ad Widget

வடமாகாண சபையின் வேண்டுகோளுக்கு செவிசாய்க்காத அதிகாரிகள்

வடமாகாண சபையின் இன்றைய அமர்விலும் வடமாகாண சபையின் திணைக்களங்களின் கீழுள்ள அதிகாரிகள் சமூகமளிக்கவில்லை.

வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு, கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபைக் கட்டிட தொகுதியில் இன்று வியாழக்கிழமை (25) இடம்பெற்று வருகின்றது.

north-provincial-vadakku-npc

வடமாகாண நிறுவனங்களின் கீழுள்ள திணைக்களங்களைச் சார்ந்த அதிகாரிகள் மற்றும் அமைச்சின் செயலாளர்கள், வடமாகாண சபை அமர்வுகளில் கட்டாயமாக கலந்துகொள்ள வேண்டும் என வடமாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் கடந்த அமர்வுகளில் வலியுறுத்தியிருந்தார்.

அதாவது, வடமாகாண சபையினால் அழைப்பு விடுக்கப்பட்டும் அமர்விற்கு வருகை தராமல் சபையையும் முதலமைச்சரையும் உதாசீனம் செய்யும் அமைச்சின் செயலாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வடமாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையிலும் அதிகாரிகள் சிலர், இன்றைய அமர்வில் கலந்துகொள்ளவில்லை. இதேவேளை, 38 உறுப்பினர்களை கொண்ட வடமாகாண சபையில் இன்றை அமர்வில் 26 உறுப்பினர்கள் சமூகமளித்துள்ள நிலையில், சபை அமர்வுகள் நடைபெற்று வருகின்றது.

வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், கறுப்பு சால்வை அணிந்தபடி இன்றைய அமர்வில் கலந்துகொண்டார். தன்னுடைய பிரேரணை வடமாகாண அமர்வில் எடுத்துக்கொள்ளப்படாமையை கண்டித்து சிவாஜிலிங்கம் கறுப்பு சால்வை அணிந்து வந்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

‘தமிழ் மக்கள் மீதான இனப் படுகொலைகளில் இருந்து பாதுகாக்க சர்வதேச பொறிமுறையை ஏற்படுத்துமாறு வேண்டுகோள்’ என்ற பிரேரணையை கடந்த அமர்வில் சிவாஜிலிங்கம் முன்வைத்த போது, இனப்படுகொலை என்ற வசனம் சட்ட சிக்கலை ஏற்படுத்தும் எனக்கூறி வடமாகாண அவைத்தலைவர் மற்றும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் ஏற்க மறுத்திருந்தனர்.

Related Posts