வவுனியாவில் வியாழக்கிழமை (9) முதல் வடமாகாண குத்துச்சண்டைப் போட்டிகள் ஆரம்பமாகியுள்ளன. வவுனியா பழைய பேருந்து நிலைய வளாகத்தில் ஆரம்பமான இப்போட்டிகள், எதிர்வரும் 11ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன.

வடமாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் ஏற்பாட்டிலும், மாவட்ட குத்துச்சண்டைச் சங்கத்தின் தலைவரும் குத்துச்சண்டை பயிற்சியாளருமான நிக்ஸன் ரூபராஜ் அவர்களின் ஒழுங்கமைப்பிலும் நடைபெறும் இப்போட்டித் தொடரில், வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த 90 குத்துச்சண்டை வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இப்போட்டிக்கான வெற்றிக் கேடயங்களின் அனுசரணையை வவுனியா ஒமேகா ஆடைத்தொழிற்சாலை வழங்கியுள்ளது.
போட்டியின் ஆரம்ப நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ம. சபர்ஜா கலந்துகொண்டார்.
அத்துடன், ஒமேகா ஆடைத்தொழிற்சாலையின் மனிதவள முகாமையாளர் அன்ரன் மதன் ராஜ், மாவட்ட செயலகத்தின் பிரதம கணக்காளர், வடமாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் பலர் நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.
குத்துச்சண்டை விளையாட்டு குறித்து விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் நோக்கில், இப்போட்டிகள் திறந்தவெளியில் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.