அரசியல் கட்சி ரீதியில் செயற்பட்ட வடமாகாண கல்வி அபிவிருத்திச் சபையின் செயற்பாடுகளை உடனடியாக இடைநிறுத்தி அதனை கலைக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோசேப் ஸ்டாலின் தெரிவித்தார்.
இது தொடர்பில் ஆசிரியர் சங்கத்தலைவர் ஞாயிற்றுக்கிழமை (01) விடுத்துள்ள செய்திக்குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
கல்வி அபிவிருத்திச் சபை என்ற அமைப்பு வேறு எந்த மாகாணத்திலும் செயற்படவில்லை. வடமாகாணத்தில் மட்டும் அந்தச் சபை செயற்பட்டு வந்தது. இது கட்சி அரசியல் சார் நிலையில் ஜனநாயகத்துக்கு முரணாக செயற்பட்டது. இந்த அமைப்பின் மூலம் வடக்கு மாகாணத்தில் கல்விச் செயற்பாடுகளில் பெரும் பாதிப்புக்கள் ஏற்பட்டன.
குறுகிய அரசியல் கண்ணோட்டத்தில் வடமாகாண கல்வி அபிவிருத்திச் சபை செயற்பட்டமையால் கல்வி ஊடாக கட்சி அரசியலை வளர்ப்பதற்கான செயறபாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
அதிபர், ஆசிரியர் இடையிலும் கல்வியாளர்கள் இடையிலும் குழப்பமான நிலை நிலவியதோடு, வடமாகாண கல்வியில் மேலாதிக்கம் செலுத்தப்பட்டது.
குறித்த அமைப்பின் செயற்பாடுகளை உடனடியாக இடைநிறுத்துவதோடு அமைப்பு கலைக்கப்பட வேண்டும் எனவும் அந்த குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.