வடக்கு மகாணத்தில் இலவச அம்பியூலன்ஸ் சேவையை தரமுயர்த்த வட மாகாண சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்த அமைச்சின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைச்சு, நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
‘இலங்கையிலே முதன் முதல் இலவச அரச அம்பியூலன்ஸ் சேவை, வட மாகாண சுகாதார அமைச்சினால் கடந்த ஜனவரி மாதம ஆரம்பிக்கப்பட்டதுடன் இந்த சேவையை மக்கள் இலகுவாக பெற்றுக்கொள்ளும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
சுகாதார அமைச்சரின் முயற்சியினால் ஏற்படுத்தப்பட்ட இநச்த அம்பியூலன்ஸ் சேவையை மேலும் வினைத்திறனுடன் செயற்படுத்தவும் மக்களுக்கு மேலும் அதிகமான சேவையை வழங்கவும் லண்டன் அம்பியூலன்ஸ் சேவை நிலையத்தினருடன் கலந்துரையாடி சில மாற்றங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக லண்டன் அம்பியூலன்ஸ் சேவையின் உயரதிகாரியொருவர் கடந்தவாரம், வடக்குக்கு விஜயம் செய்து, சுகாதார அமைச்சர் மற்றும் அமைச்சின் உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடி தமது திட்டத்தை கையளித்துள்ளார்.
அத்துடன், இச் சேவையில் ஈடுபடும் அனைத்து ஊழியர்களுக்கும் முதலுதவி தொடர்பான பயிற்சிகளையும் அதற்கான உபகரணங்களையும் வழங்கவும் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்’ என வடமாகாணசபை சுகாதார அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடபட்டுள்ளது.