Ad Widget

வடமாகாணசபை தீர்மானத்தின் பிரதி ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருக்கு அனுப்பி வைப்பு

வடமாகாண சபையில் கடந்த 10ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலை தொடர்பான தீர்மானத்தின் பிரதிகள், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர், பொதுச் செயலாளர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வடமாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

CVK-Sivaganam

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது,

‘தமிழ் மக்களின் உண்மையான அழிவுகளையும் இழப்புக்களையும் விளங்கிக்கொண்டு நீதியான நியாயமான முறையில் செயற்பட வேண்டியது அவசியம். இலங்கைக்கு எதிரான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு விசாரணை அறிக்கை வெளியிடப்படவிருந்த நேரத்திலேயே இந்த பிரேரணை கொண்டுவரப்பட்டு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

இதனை அனுப்பி வைப்பதனூடாக விசாரணை அறிக்கை மேலும் வலுப்படுமன்றே எதிர்பார்த்திருந்தோம். அந்த அறிக்கையை வெளியிட வேண்டுமென தமிழ்த் தரப்புக்கள் கோரி வந்திருந்த நிலையில் இதனை ஒத்திவைக்குமாறு அரச தரப்பினர்கள் கோரி வந்தனர்.

மார்ச்சில் வெளியிடாமல் செப்ரெம்பர் மாதத்தில் வெளியிடுவதாக பிற்போடப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளமையானது, ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் பெரும் ஏமாற்றத்தையே ஏற்படுத்தியிருக்கின்றது. அதனை ஏற்கனவே திட்டமிடப்பட்டது போன்று மார்ச் மாதத்திலேயே வெளியிடப்பட வேண்டுமென்று நாங்கள் கோருகின்றோம். அவ்வாறு வெளியிடுவதனையே தமிழ் மக்களும் எதிர்பார்க்கின்றனர்.

நீதி கிடைக்குமா? என்ற ஏக்கத்துடன் இருந்த மக்கள் சர்வதேசத்தை நம்பினர். அந்த நம்பிக்கையிலேயே இன்று நீதிக்காக காத்திருக்கின்றனர். ஆயினும் இதனை செப்ரெம்பர் மாதத்துக்கு பிற்போடப்பட்டு அறிக்கை தாமதமாக வெளியிடுவதாக இருந்தால், குறிப்பிட்ட காலப்பகுதியில் தொடர்ந்தும் இலங்கைக்கு வருகை தந்து விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

அவ்வாறு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு அதனூடாக கிடைக்கின்ற சாட்சியங்களையும் உள்ளடக்கியதாக செப்ரெம்பரில் அறிக்கை வெளிக்கொண்டுவரப்பட வேண்டும். அறிக்கை பிற்போடப்பட்டிருப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் அதனை மார்ச் மாதத்திலேயே வெளியிட வலியுறுத்தியும் பல்கலைக்கழக சமூகம் மற்றும் சிவில் அமைப்புக்கள் இணைந்து பேரணியொன்றை யாழ்ப்பாணத்தில் நடத்தியிருந்தன. இதற்கு நாமும் ஆதரவு தெரிவித்தோம்.

இலங்கை மீதான விசாரணை அறிக்கையானது மார்ச் மாதத்திலேயே வெளியிட வேண்டும். இதுவே நீண்டகாலமாக காத்திருக்கின்ற தமிழ் மக்களுக்கு கிடைக்கக்கூடிய நீதியாக அமையும். இதனையே சர்வதேச சமூகம் முன்னெடுக்க வேண்டியதும் அவசியமாகும். தமிழினத்துக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்கள் அநீதிகளுக்கு தமிழ் மக்கள் நீதி வேண்டி நிற்கின்றனர்.

இதனை இலங்கை அரசு வழங்காது என்ற காரணத்தினாலேயே சர்வதேச சமூகத்திடம் தமிழ் மக்கள் சென்றனர். சர்வதேசத்தை நம்பியுள்ள தமிழ் மக்களை சர்வதேசம் கைவிடாது பாதுகாத்து நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.

ஒட்டுமொத்த தமிழ்த் தேசிய இனத்தின் கோரிக்கையாக தற்போதும் இருப்பது இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட்டு நீதி, நியாயம் கிடைக்க வேண்டும் என்பது ஆகும். இதனை விடுத்து இலங்கை அரசின் உள்நாட்டு விசாரணையில் எந்தவித நம்பிக்கையும் இல்லை. இதனை வரலாறுகள் எமக்கு தெளிவாகவே எடுத்துக்கூறுகின்றன’ என்றார்.

Related Posts