Ad Widget

வடமாகாணசபை அபிவிருத்திக்கு கிடைத்த சந்தர்ப்பங்கள் அனைத்தையும் தவறவிட்டிருக்கின்றது!

வடமாகாணத்தில் என்ன அபிவிருத்தி நடந்திருக்கிறது? என கேள்வி எழுப்பியிருக்கும் வடமாகாணசபை எதிர்கட்சி தலைவர் சி.தவராசா வடமாகாணசபை அபிவிருத்திக்கு கிடைத்த சந்தர்ப்பங்கள் அனைத்தையும் தவறவிட்டிருக்கின்றது எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

வடமாகாணசபையின் மூன்றரை வருட செயற்பாடுகள் தொடர்பாக யாழ். ஊடக அமையத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் குறிப்பிடுகையில்,

வடமாகாணம் ஆளுநருடைய ஆட்சியில் இருந்தபோது நடந்த அபிவிருத்தி மற்றும் வளர்ச்சியை விட தற்போது என்ன மாற்றத்தை கண்டிருக்கின்றது? வட மாகாணத்தில் 32 ஆயிரம் அரசாங்க ஊழியர்கள் உள்ளனர். அவர்களை கொண்டு மாகாணம் அபிவிருத்தி செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கல்வியில் 9ம் இடத்தில், அபிவிருத்தியில் 9ம் இடத்தில் என கடைசி நிலையிலேயே வடமாகாணம் இருக்கின்றது. குறைந்தபட்சம் ஆசிரியர்களை கூட சரியாக பங்கிடத்தெரியாத நிலையில் வடமாகாணசபை உள்ளது.

அண்மையில் 450 வரையான பட்டதாரி ஆசிரியர்கள் சேவையில் உள்வாங்கப்பட்டனர். அவர்களில் 100 வரையான ஆசிரியர்கள் கஷ்ட பிரதேசங்களில் கடமையாற்றாமல் மீண்டும் தங்கள் இருப்பிடங்களுக்கு அருகில் வந்துள்ளனர். அதேபோல் கழிவுகளை முகாமை செய்வதற்கும் கூட இயலாத நிலையே காணப்படுகின்றது.

யாழ்ப்பாணத்திற்கு இந்திய பிரதமர் மோடி வந்தபோது யாழ்.மாநகரத்தை தூய்மையாக்குங்கள் என கேட்டேன். அதற்கு எனக்கு வழங்கப்பட்ட பதில் அவர் எந்த வீதி வழியாக வருகிறார் என்பது தெரியாது. அது தெரிந்தால் செய்லாம் என்பதே. இப்போது இந்திய பிரதமர் மீண்டும் வரப்போகிறார். ஆனால் மாநகரம் மீண்டும் கழிவுகளால் நிரம்பியே காணப்படுகின்றது.

எனவே வடமாகாணசபை செய்யவேண்டிய விடயங்களை கூட செய்யாமல் விட்டி ருக்கின்றது. குறிப்பாக வடமாகாணசபைக்கு அரசியலமைப்பின் ஊடாக 35 விடயங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு நியதிச்சட்டங்களை உருவாக்கவேண்டும். அவற்றை கூட இந்த மாகாணசபை செய்திருக்கவில்லை.

குறைந்தது 300 நியதிச்சட்டங்களை மாகாணசபை உருவாக்கியிருக்க வேண்டும். ஆனால் 4 அல்லது 5 நியதிச்சட்டங்களையே உருவாக்கியிருக்கின்றார்கள். அகவே மாகாணசபையால் வினைத்திறனாக செயற்பட முடியாத நிலை காணப்படுகின்றது. மேலும் அரசாங்கம் வழங்கும் மிக சொற்பமான நிதியை தவிர இந்த மாகாணசபை வேறு எந்த நிதியை பெற்றிருக்கின்றது.

சுகாதார அமைச்சு மட்டும் அரசு வழங்கும் நிதிக்கு மேலதிகமாக சுமார் 9 ஆயிரம் மில்லியன் ரூபாய் நிதியை பெற்று மக்களுக்கு பயன்படுத்தியுள்ளது. கடந்த மாதம் 20ம் திகதி புலம்பெயர் தமிழர்களை ஒன்றிணைத்து முதலீடு சம்பந்தமான மாநாடு ஒன்று கொழும்பில் நடைபெற்றது. அந்த மாநாடு தொடர்பாக நான் முதலமைச்சரிடம் கேட்டபோது அதற்கான அழைப்பு கிடைக்கவில்லை என கூறப்பட்டது.

ஆனால் கடந்த மாதம் 4ம் திகதியே முதலமைச்சருக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டு விட்டது. இதேபோல் 25 ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான இரணைமடு – யாழ்ப்பாணம் நீர் திட்டத்தை நிரகரித்தவர்கள் இதுவரை அதற்காக வழங்கிய மாற்று திட்டம் என்ன? மேலு ம் 360 வரையான தீர்மானங்களை வடமாகாணசபை நிறைறவேற்றியுள்ளது. அதனால் எந்த பயனும் கிடையாது.

தீர்மானங்கள் சட்ட வலுவற்றவை. மேலும் நியதி சட்டங்களை இயற்றி அவற்றுக்கான உப விதிகளையும் உருவாக்க வேண்டும். அவ்வாறு இயற்றப்படவில்லை. எவராவது வழக்கு தொடர்ந்தால் மாகாணசபையின் செயற்பாடுகளை முழுமையாக முடக்க இயலும் என்றார்.

Related Posts