Ad Widget

வடமாகாணசபையால் 82 தற்காலிக வீடுகள் அமைப்பு

இன்று எம்மால் நேரடியாகவும் எம் பொருட்டு மறைமுகமாகவும் பல நன்மைகள் எம் மக்களுக்குக் கிடைத்து வருகின்றன என வடமாகாண முதலமைச்சர் தெரிவித்தார்.

wigneswaran__vick

முள்ளிக்குளம் பகுதியில் தற்காலிகமாக வீடு அமைத்துக் கொடுக்கும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி வைத்து உரையாற்றும் போது இதனைத் தெரிவித்தார்.

மேலும் அவர் தனது உரையில்,

தொடர்ந்து வடகிழக்கு மாகாணங்களில் படையினர் பெருவாரியாக அரசாங்கத்தால் நிலை நிறுத்தப்பட்டுள்ளாதால் எமது மக்கள் படும் அவலத்தையும் அவதியையும் எடுத்தியம்பும் ஒரு நிகழ்வாக இன்றைய இந்த நிகழ்வு அமைந்துள்ளது.

இராணுவம் எம் மண்ணில் நீடித்து நிற்பதால் பல அவலங்களை நாம் எதிர் நோக்கி வருகின்றோம். நீர் பற்றாக்குறை, நீரில் அசுத்தம் கலத்தல் போன்றவை கூட படையினரின் பிரசன்னத்தால் ஏற்பட்டுவரும் விளைவுகளே என்று சென்ற சில நாட்களுக்கு முன்னர் கருத்துத் தெரிவிக்கப் பட்டது.

இங்கு 82 குடும்பங்களுக்கு ஒரு நடுத்தர வீடமைப்புத் திட்டத்தை வழங்குவதற்கான நிதி ஒதுக்கப்பட்டது. வீடுகள் கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆனால் படையினர் இம் மக்களின் சொந்த இடங்களில் தொடர்ந்து குடிகொண்டிருப்பதால் மழை வந்து விட்ட இந்தக் கால கட்டத்தில் என்ன செய்வது என்று நாங்கள் கலந்தாலோசித்து அவர்கள் வெளியே போகும்வரை எம் மக்களின் பாடு என்னவாகும் என்பதைக் கருத்தில் கொண்டு இப்பகுதியில் தற்காலிக கொட்டில்களிலும் குடிசைகளிலும் அவர்கள் சொல்லொண்ணாத் துயரத்தை அனுபவித்து வருவதையும் பார்த்துத் தான் அவர்களின் நிம்மதியையும் பாதுகாப்பையும் உத்தேசித்து ஒரு தற்காலிக வீட்டுத் திட்டம் ஒன்றை வகுத்துள்ளோம்.

இன்று எம்மால் நேரடியாகவும் எம் பொருட்டு மறைமுகமாகவும் பல நன்மைகள் எம் மக்களுக்குக் கிடைத்து வருகின்றன.இன்று நடைபெறுவது எமது நேரடி உதவிகள். சென்ற கிழமை எம் நிமித்தம் மறைமுக உதவிகளை எமது மக்கள் பெற்றார்கள். நாம் பதவியில் இருப்பதால் நாங்கள் எதுவும் செய்யவில்லை. தாங்களே எல்லாவற்றையும் செய்ய வல்லவர்கள் என்பதை எடுத்துக் காட்ட எமது மக்கள் 20,000 பேர்களுக்கு காணிஅனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டன. மருத்துவமனைகள் திறந்து வைக்கப்பட்டன. புகையிரதப் பாதை திறந்து வைக்கப்பட்டது. மேலும் பல காரியங்கள் நடந்தேறியுள்ளன. மக்களின் ஆபரணங்கள் 5 வருடங்களின் பின்னர் திடீரென்றுவெளிக்கொண்டு வந்த தார்ப்பரீயம் என்ன? வடமாகாணத்தைத் தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன் வசம் வைத்திருக்கின்றது. ஆனால் வடமாகாண மக்களின் வாக்குகளைப் புறக்கணித்து என்னால் ஜனாதிபதி பதவியை மூன்றாம் முறை எட்ட முடியாது. ஆகவே வடமாகாண மக்களை எப்படியாவது என் பக்கம் இழுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன்தான் எமது மாண்புமிகு ஜனாதிபதி தாராள சிந்தையுடைய கொடையாளியாக மாறி உள்ளார்.

ஆனால் எம் மக்களுக்கு நன்றாகத் தெரியும் புகையிரதப் பாதையை நிர்மாணித்துத் தந்தது இந்திய அரசாங்கம் என்று. வன்னியின் வைத்தியசாலையை அமைத்துக் கொடுத்தவர்கள் பசுபிக் பிராந்திய அமெரிக்கக் கடற்படையினர் என்று.

நாம் பதவியில் இருப்பது எந்தளவுக்கு அரசாங்கத்தை நிலை குலைய வைத்துள்ளது என்பது இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம். நாம் வெறுமனே பதவியில் இருந்தாலே போதும் அரசாங்கம் உங்களுக்கு வாரித் தருவார்கள்.

நாம் இருப்பதால்த்தான் அவர்கள் சென்ற ஐந்து வருடங்கள் தான்தோன்றித்தனமாய்ச் செய்து வந்தவற்றைச் சற்றுத் தளர்த்தி தவிர்த்து வருகின்றார்கள். நாம் இருப்பதால் இங்கு பலர் செய்த ஊழல்கள் அம்பலத்திற்கு வந்து கொண்டிருக்கின்றன. மக்களின் பணத்தை எவ்வாறு கொள்ளை அடித்தார்கள் என்பது வெளிவந்து கொண்டிருக்கின்றது. நாமிருந்தால் ஊழலின்றிச் செயற்பட வேண்டிய ஒரு கடப்பாடு எல்லோருக்கும் எழுந்துள்ளது.

நாம் 3 விதங்களில் எமக்கு வேண்டியவற்றைப் பெறலாம். ஒன்று வன்முறை. ஆனால் வன்முறை மேலும் வன்முறைக்கே வித்திடும். இரண்டு வலியச் சென்று சரணடைந்து எமது வாழ்வை விருத்தி செய்வது. என்றென்றும் இவ்வாறு நலன் பெறுபவர்கள் அடிமைகள் என்றே கணிக்கப்படுவார்கள். மூன்றாவது அப்பழுக்கற்ற கொள்கைகளை முன்வைத்து எமது தேவைகளைக் கூறிப் பெற எத்தனிப்பது. இது காலம் போகும். ஆனால் காலக் கிரமத்தில் நன்மை பயக்கும். நாம் இதைத்தான் செய்து வருகின்றோம்.

வன்முறையைக் கண்டித்துள்ளோம். வருந்தி அழைத்தாலும் எமது வலுவான கொள்கைகளில் இருந்து வழுவாது எமது நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம். ஆகவே வடமாகாணம் எந்த விதத்திலும் நன்மை பெறப்போவது நிச்சயமே. எமது வருங்காலம் நல்ல காலமாக அமையப் போவது நிச்சயமே என்றார்.

Related Posts