வடக்கு மாகாண கல்வி அமைச்சினால் பணித்தடை செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு நீதி கோரி, வடக்கு மாகாண கல்வி அமைச்சின் முன்பாக இன்று (திங்கட்கிழமை) காலை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.
தூரப்பிரதேசங்களில் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக கடமையாற்றிய தம்மை இடமாற்றுமாறு கோரி கடந்த மாதம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ரவீந்திரனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தனர். இதன் பின்னர் மூன்று ஆசிரியர்களுக்கு பணித்தடை விதிக்கப்பட்டது.
குறித்த பணித்தடையினை நீக்கக் கோரியும், வடக்கு மாகாண கல்வி அமைச்சினால் ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கோரியும் இலங்கை ஆசிரியர் சங்கம் மற்றும் வடக்கு மாகாண ஆசிரியர்கள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தனர்.
இதன்போது, ‘பதவி உயர்வுகளையோ சம்பள ஏற்றங்களையோ ஒழுங்காக வழங்க நடவடிக்கை எடுக்காத வடக்கு மாகாண கல்வியமைச்சு, ஆசிரியர்களின் நலன்சார்;ந்து சாதித்தது என்ன?’, ‘இடமாற்றம் கோரிய ஆசிரியர்களுக்கு குறுக்குவழியில் சிந்தித்து மூன்று ஆசிரியர்களுக்கு பணித்தடை வழங்கப்பட்டுள்ளது. இதன் சூட்சுமம் உங்களுக்கு புரிகிறதா?’ போன்ற சுலோகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஆசிரியர்கள் தாங்கியிருந்தனர்.