Ad Widget

வடக்கு மாகாணத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று!!

வடக்கு மாகாணத்தில் மேலும் 23 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

அவர்களில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 21 பேருக்கும் கிளிநொச்சி மற்றும் மன்னாரில் தலா ஒருவருக்கும் தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவித்தார்.

யாழ். போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கும் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரிபிரிவில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டவர்களுடன் தொடர்புடைய 9 பேருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மரக்கறி சந்தைத் தொகுதியில் எழுமாறாக 60 பேரிடம் மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனை முன்னெடுக்கப்பட்டதில் 9 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 6 பேர் பனை உற்பத்தி பொருள்கள் வியாபாரிகளும் மூவர் மரக்கறி வியாபாரிகளும் அடங்குகின்றனர்.

கோப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்கள் இருவரும் காரைநகர் பேருந்துச் சாலை பணியாளரின் குடும்ப உறுப்பினர்கள் என்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

மன்னாரில் நகரைச் சேர்ந்த மன்னார் பொது வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட நிலையில் ஒருவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கிளிநொச்சி கண்டாவளையில் ஒருவருக்கு கோரோனா வைரஸ் தோற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

Related Posts