Ad Widget

வடக்கு மக்கள் மாவட்டங்களுக்கு வெளியே பயணிக்கத் தடை – ஜனாதிபதி

வடக்கின் 05 மாவட்டங்களிலும் வாழும் மக்களுக்கு தாங்கள் வாழும் மாவட்டங்களுக்கு வெளியே பயணம் செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

கோரோனா வைரஸ் தொற்றுடைய மதகுருவை சந்தித்த மற்றும் அவருடன் தொடர்புகொண்ட அனைவரையும் அடையாளம்காணும் வரை இந்த பயணத் தடை நடைமுறையில் இருக்கும் என்று ஜனாதிபதி செயலகம் குறிப்பிட்டுள்ளது.

இதுதொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அனுப்பிய செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் தற்போது நடைமுறையில் இருக்கும் ஊரடங்கு சட்டம் மார்ச் 24, செவ்வாய் காலை 6 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இம்மாவட்டங்களில் நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு நீக்கப்படும் ஊரடங்கு சட்டம் பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் பிறப்பிக்கப்படும்.

கடந்த தினங்களில் வடக்கிற்கு பயணம்செய்த சுவிட்சர்லாந்தில் இருந்து வருகைதந்த கோரோனா வைரஸ் தொற்றுடைய மதகுருவை சந்தித்த மற்றும் அவருடன் தொடர்புகொண்ட அனைவரையும் அடையாளம்காணும் வரை இந்த பயணத் தடை நடைமுறையில் இருக்கும்.

ஐந்து மாவட்டங்களிலும் வசிக்கும் மக்கள் கோரோனா தாக்கத்திற்கு உற்படுவதிலிருந்து பாதுகாக்கும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

வடக்கின் மக்கள் வாழ்க்கையை பாதுகாக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டுள்ள செயற்பாட்டினை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு அரசு அங்கு வாழும் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது- என்றுள்ளது.

Related Posts