முன்னாள் ஜனாதிபதி மஹிந்த வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் தங்களது வாக்குகளை அளிக்க இடமளித்திருக்காவிட்டால் இன்றும் அவரே ஜனாதிபதியாக இருந்திருப்பார் என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
எனினும், ஜனநாயகத்தை சிறப்பாக ஏற்படுத்தியதனாலேயே மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியை இழக்கும் நிலை ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மஹிந்த ராஜபக்ஷ அவ்வாறு செய்திருக்காமல் சர்வாதிகாரியாக இருந்திருந்தால் அவரும் ஜனாதிபதியாக இன்று இருந்திருப்பார். தானும் இன்றும் பாதுகாப்புச் செயலாளராக இருந்திருப்பேன் என்றும் கோட்டாபய கூறினார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் உதய கம்மன்பிலவின் முதலாவது தேர்தல் பிரசார நடவடிக்கை பத்தரமுல்லையில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றது. இதில் விசேட விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே கோட்டாபய இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், எமது கைகளில் தவறுகள் இடம் பெற்றள்ளன. நாங்கள் இழைத்த தவறுகளை சரிசெய்துகொள்ள தயாராக இருக்கின்றோம். ஏனென்றால் தவறிழைப்போரை மஹிந்த ராஜபக்ஷ இப்போது சரியான முறையில் அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியை சில ஊடகங்கள் தவறான முறையில் திரிபுபடுத்தி மக்களுக்கு காண்பித்திருந்தன. கொள்ளை அடிப்படையில் மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடிப்பதற்கு முடியாத காரணத்தினால் அவர்கள், சர்வதேச ரீதியில் முயற்சி செய்து, கள்ளன் என்ற முத்திரையை பதிக்கச் செய்து, மக்களையும் நம்பவைத்து, மஹிந்தவை வீட்டிற்கு அனுப்பினர். கள்ளன், ஊழல், மோசடிக்காரர்கள் என்று தெரிவிக்கும் ரணில் விக்கிரமசிங்கவே உண்மையான கள்ளன் – என்றார்.