வடக்கு, கிழக்கு பகுதியில் மேலும் பல புதைகுழிகள் – சம்பந்தன்

sambanthan 1_CIமன்னாரில் மாத்திரம் மனிதப் புதைகுழி இல்லை. வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்கள் எல்லாவற்றிலும் இவ்வாறு புதை குழிகள் இருக்கின்றன.

அதற்குரிய தரவுகளும் எம்மிடம் இருக்கின்றன. இதனைப் பகிரங்கப்படுத்த வேண்டிய இடங்களில் – சந்தர்ப்பம் வரும்வேளையில் நாம் உரிய வகையில் எடுத்துக் கூறுவோம்.

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் நேற்று தெரிவித்தார்.

மன்னார் மனிதப் புதைகுழி விவகாரம் குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு:

வடக்கு, கிழக்கு யுத்த வன்முறைகளினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்களை இலக்கு வைத்து கொலைகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக 1983 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இவ்வாறான கொலைகள் மேலும் அதிகரித்தன.

சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட மக்கள் மற்றும் திட்டமிட்ட தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட மக்கள் புதைகுழிகளில் தற்போது எலும்புக்கூடுகளாக இருக்கின்றனர். அதில் ஒன்றுதான் மன்னார் மனிதப் புதைகுழி. இதை விட மேலும் பல மனிதப் புதைகுழிகள் வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களில் இருக்கின்றனர்.

அதற்குரிய தரவுகளும் எம் வசம் உள்ளன. இவற்றை பகிரங்கப்படுத்த வேண்டிய இடங்களில் எடுத்துச்சொல்வோம்” – என்றார்.

Related Posts