பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை பூர்த்தி செய்வதில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கில் ஆசிரியர் வெற்றிடங்களை பூர்த்தி செய்வதிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்காக ஆசிரியர் தொழில் யாப்பில் ஆசிரியர் சேவைக்கு இணைத்துக் கொள்ளும் நடைமுறைக்கு அப்பால் ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்வதற்காக விசேட அமைச்சரவை ஆவணமொன்று சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாகவும் கல்வி அமைச்சர் கூறினார்.
ஆசிரியர் வெற்றிடங்கள் தொடர்பில் அறிக்கையொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இதனை கணனிமயப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்காக 1500 ஆசிரியர்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டனர். 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் பெருந்தோட்டப் பாடசாலைகளுக்காக மூவாயிரம் பேர் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வரவு செலவு திட்ட மீதான இரண்டாம் நாள் விவாத்தில் உரையாற்றிய அமைச்சர் டிசம்பர் மாதம் 31ம் திகதிக்கு முன்னர் பாடசாலைகளில் மொழி ரீதியிலான வகுப்பறை சமத்துவத்தைப் பேணும் வகையில் ஆசிரியர்களை இணைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதன் கீழ் 30 ஆயிரம் ஆசிரியர்கள் புதிதாக சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.