Ad Widget

வடக்கு அமைச்சு செயலாளர்கள் உட்பட ஆறு பேரின் இடமாற்றம் 27 இல் நடைமுறைக்கு!

வடமாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் உட்பட ஆறு செயலாளர்களுக்கு வழங்கப்பட்ட இடமாற்றம் மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

எதிர்வரும் 27ஆம் திகதி இந்த இடமாற்றம் நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட ஆறு பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது என்று முன்னர் அறிவிக்கப்பட்டு, மீண்டும் அந்த இடமாற்றம் வடக்கு மாகாண ஆளுநரின் பணிப்புக்கமைய திடீரென நிறுத்தப்பட்டிருந்தது.

வடக்கு மாகாண சபையூடாக ஆளுநரின் அனுமதியுடனேயே இந்த இடமாற்றம் முன்னர் வழங்கப்பட்டது. எனினும் தமக்கு உரிய கால அவகாசம் வழங்கப்படவில்லை என்று அமைச்சுக்களின் செயலாளர்கள் ஆளுநரிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க அந்த இடமாற்றங்கள் நிறுத்தப்பட்டிருந்தன.

இந்த நிலையில் எதிர்வரும் 27 ஆம் திகதி நடைமுறைக்கு வரும் வகையில் அந்த இடமாற்றங்கள் மீள நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, வட மாகாண சுகாதார அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய இ.ரவீந்திரன் கல்வி அமைச்சின் செயலாளராகவும் – கல்வி அமைச்சின் செயலாளராக பணிபுரிந்த எஸ்.சத்தியசீலன் மீன்பிடி அமைச்சின் செயலாளராகவும் – மீன்பிடி அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய இ.வரதீஸ்வரன் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளராகவும் – உள்ளூராட்சி அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய சி.திருவாகரன் சுகாதார அமைச்சின் செயலாளராகவும் – ஏப்ரல் 27ஆம் திகதி நடைமுறைக்கு வரும்வகையில் இடமாறம் செய்யப்படுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts